1992 நாளைய தீர்ப்பு..2026 மக்கள் தீர்ப்பு! நாடாள வந்த நாயகன்! தமிழக அரசியலில் தொடங்கிய ’விஜய் யுகம்’
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கைப்பற்றிய விஜய், இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்று புதிய அரசியல் வரலாறு படைத்துள்ளார். 1992ஆம் ஆண்டு ஹீரோவாக தொடங்கிய அவரது திரைப்பயணம், 2026ஆம் ஆண்டு அரசியல் மகுடத்துடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
1974ஆம் ஆண்டு பிறந்த விஜய், சிறுவயதிலிருந்தே சினிமாவுடன் இணைந்திருந்தார். இயக்குநரான தந்தை மூலம் திரையுலகில் அறிமுகமானாலும், ஆரம்பத்தில் அவருக்கான பாதை எளிதாக இருக்கவில்லை. முதல் சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

அவரது தோற்றம், நடிப்பு, உடல்மொழி என பல்வேறு விஷயங்களில் விமர்சனங்களும் கிண்டல்களும் எழுந்தன.
ஆனால் அதையே தனது பலமாக மாற்றிக் கொண்டார் விஜய். மெதுவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படங்களை தரும் நம்பிக்கை நாயகனாக உயர்ந்தார்.
ஆரம்பத்தில் அவரது படங்கள் குடும்ப ரசிகர்களை கொண்டாடாத நிலையில், 'பூவே உனக்காக' படம் அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு காதல், குடும்பம், ஆக்ஷன், அரசியல் சாயல் கொண்ட கதைகள் என பல்வேறு வகை படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார்.
திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். அப்போது இருந்து விஜய்யின் அரசியல் பயணம் மெதுவாக தொடங்கியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 2011 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததும், பின்னர் பல சமூக மற்றும் அரசியல் கருத்துகளை தனது படங்கள் மற்றும் பேச்சுகள் மூலம் வெளிப்படுத்தியதும், அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது.
குறிப்பாக 'தலைவா' படத்தின் போது இடம்பெற்ற 'TIME TO LEAD' 'அண்ணாவுக்கு அடுத்து நீங்க தான்' போன்ற அரசியல் சாயல் கொண்ட வாசகங்கள், விஜய்யின் அரசியல் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தின. இதற்கிடையில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் புதிய தலைமுறையினரிடம் விஜய்க்கு தனி வரவேற்பு உருவானது. அவரது எளிமையான பேச்சு, மக்கள் மத்தியில் அடிக்கடி தோன்றுவது, சமூக பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது ஆகியவை அவரை அரசியல் மாற்றத்திற்கான முகமாக மாற்றின.
2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய விஜய், தனது முதல் தேர்தலிலேயே அதிரடி சாதனை படைத்துள்ளார். திமுக, அதிமுக போன்ற பல தசாப்தங்களாக அரசியலில் வேரூன்றிய கட்சிகளுக்கு மத்தியில், எந்த பெரிய கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தமிழக அரசியலையே அதிரவைத்தது.
அதன்பிறகு நடைபெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகள், கூட்டணி ஆதரவு, பெரும்பான்மை கணக்குகள் போன்ற பல கட்டங்களை கடந்து, இறுதியில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலைக்கு விஜய் உயர்ந்துள்ளார். இது வெறும் நடிகரின் அரசியல் வெற்றியாக மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் புதிய தலைமுறை எழுச்சியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த சூழலில், மூன்றாவது சக்தியாக உருவெடுத்து ஆட்சியை கைப்பற்றியிருப்பது மிகப்பெரிய அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது.
திரையுலகில் ரசிகர்களின் "தளபதி"யாக இருந்த விஜய், இப்போது தமிழக அரசியலின் முக்கிய தலைவராக மாறியுள்ளார். 1992ல் தொடங்கிய ஒரு நடிகரின் பயணம், 2026ல் தமிழக அரசியல் வரலாற்றின் புதிய அத்தியாயமாக மாறியுள்ளது. அண்ணா காலம், எம்ஜிஆர் காலம்,கலைஞர் காலம்,ஜெயலலிதா காலம் என பார்த்த தமிழ்நாட்டில் இனி "விஜய் காலம்" தொடங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications