சரவணன் டூ நிர்மல் குமார்! சரியும் பாஜக “விக்கெட்டுகள்”.. வெளியேறும் “தலைகட்டுகள்”
டாக்டர் சரவணான், சூர்யா சிவா, காயத்ரி ரகுராம் வரிசையில் அண்ணாமலை வருகைக்கு பின் கட்சியிலிருந்து விலகியவர்கள் வரிசையில் இணைந்துள்ளார் சிடிஆர் நிர்மல்குமார்
சென்னை: தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக செயல்பட்டு வந்த சிடிஆர் நிர்மல் குமார் திடீரென இன்று மதியம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அவரது பெயரை குறிப்பிடாமல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததன் மூலம், டாக்டர் சரவணான், சூர்யா சிவா, காயத்ரி ரகுராம் வரிசையில் அண்ணாமலை வருகைக்கு பின் கட்சியிலிருந்து விலகியவர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.
கர்நாடக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலை 2019 ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு முரளிதர் ராவ், சி.டி.ரவி, எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.

தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து அண்ணாமலைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி தேடி வந்தது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் அண்ணாமலை சர்ச்சைக்குறிய தனது பேச்சுக்களின் மூலமாக தமிழ்நாடு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

உட்கட்சிப் பூசல்
அண்ணாமலையின் பேச்சு ஒரு பக்கம் தமிழ்நாடு பாஜகவை வளர்ப்பதாக கூறப்பட்டாலும் அவரது செயல்பாடுகளால் கட்சிக்கு உள்ளேயே பூசல்களும், குழப்பங்களும் ஏற்படுவதாக கூறப்படுகின்றன. அண்ணாமலை மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் பெயர்களை சுட்டிக்காட்டியே பலர் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள்.

டாக்டர் சரவணன்
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்த மருத்துவர் சரவணன், 2021 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதே இரவு பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

சூர்யா சிவா ராஜினாமா
திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில், அவருக்கு பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவரான டெய்சிக்கும் இடையேயான பரபரப்பு தொலைபேசி உரையாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவரை 6 மாதங்கள் கட்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை தெரிவித்தார். இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் எல்.முருகன், கேசவ விநாயகம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு அவர் கட்சியில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

காயத்ரி ரகுராம் ராஜினாமா
திருச்சி சூர்யா - டெய்சி ஆடியோ விவகாரத்தில் வெளிப்படையாக விமர்சனம் செய்ததற்காக காய்த்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார் அண்ணாமலை. இதனை அடுத்து அண்ணாமலை மீது ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த அவர் கடந்த ஜனவரி மாதம் கட்சியில் இருந்து விலகினார். இதன் தொடர்ச்சியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் அண்ணாமலை.

நிர்மல் குமார் ட்விட்டர் பதிவு
இந்த வரிசையில் இணைந்து உள்ளார் தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார். "என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அண்ணாமலையை 420 மலை என்றும், பாஜக நிர்வாகிகளை வேவு பார்க்கிறார், அமைச்சருடன் ரகசியமாக பேசுகிறார் என்றும் பல்வேரு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர் வெளியேறி உள்ளார்.












Click it and Unblock the Notifications