27 மாவட்டங்களில் தேனீர் கடைகள், இனிப்பு கார வகை கடைகள் திறக்க அனுமதி.. தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழகத்தில் தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் தேனீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேனீர் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தேனீர் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் தேனீர் கடைகளை திறக்கலாம். மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பார்சல் பெற மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. நெகிழிப்பைகளில் பார்சல் பெறுவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வெறும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. கடைகளில் நின்றோ அருகேவோ யாரும் தேனீர் குடிக்கக் கூடாது. இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளும் மேற்கண்ட 27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
அது போல் அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள், சேவைகளை பெற இ சேவை மையங்கள் திறக்கவும் கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க பொருட்களுக்கு பணம் வழங்க ஏதுவாக கட்டுமான நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் வெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications