சென்னையைவிட்டுச் செல்வது வேதனை, மெரினா வழக்கு திருப்தி... உபசார விழாவில் தலைமை நீதிபதி நெகிழ்ச்சி
சென்னை: மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்ததில் முழு திருப்தி அடைந்ததாகச் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி ஓய்வுபெற்றதை அடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி வினீத் கோத்தாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார்.
அவர் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காணொலி காட்சி மூலம் அவருக்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

பாராட்டு
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தனது உரையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக 2018இல் பொறுப்பேற்ற வினீத் கோத்தாரி, இந்த இரண்டு ஆண்டுகளில் 8 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாகப் பாராட்டு தெரிவித்தார்.

எனக்கு பெருமை
பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, பெருமைக்குரிய சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியதைப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

என் இரண்டாவது வீடு சென்னை
தனது இரண்டாவது வீடான சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்டது வேதனையளிப்பதாகக் கூறிய அவர், தான் பணியாற்றிய ராஜஸ்தான், கர்நாடகா உயர் நீதிமன்றங்களை ஒப்பிடும் போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திறமையானவர்கள் என்றார்.

கசப்புணர்வு இல்லை... முழு திருப்தி
இங்கு பணியாற்றிய ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், சிறு கசப்புணர்வு கூட இல்லை என்றும் தெரிவித்த நீதிபதி வினீத் கோத்தாரி, கொரோனா தொற்று காலத்தில் ஆன் லைன் மூலம் வழக்குகளை விசாரித்தது நல்ல அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது தனக்கு முழு திருப்தியை அளித்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

அடுத்த தலைமை நீதிபதி
இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜிப் பானர்ஜி, வரும் திங்கட்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications