இந்தியாவின் உதவியை ஆப்ரிக்க கண்டம் இனி என்றும் மறக்காது! ஜி 20 மாநாட்டின் சாதனை.. உலக அரசியலே மாறுது
சென்னை: டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இன்று பிரதமர் மோடி ஆப்ரிக்க யூனியனை இந்த குழுவில் அறிமுகம் செய்து நிரந்தர உறுப்பினராக அறிவித்தார் . உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடுகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழு, ஆப்பிரிக்க யூனியனை தங்கள் உறுப்பினர்களில் ஒன்றாக சேர்த்து அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20ல் இணைந்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்து நாடு இல்லாத ஒரு கண்டம் இந்த குழுவில் இணைந்துள்ளது. பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக ஆப்ரிக்காவை இது புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னெடுப்பின் கீழ் ஆப்ரிக்கா இந்த குழுவில் இணைந்துள்ளது. இதன் மூலம் ஆப்ரிக்க நாடுகள் இந்தியாவை பாராட்ட தொடங்கி உள்ளன. இந்தியாவின் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியா கொண்டாட்டம்: இதன் மூலம் இந்தியாவை ஆப்ரிக்க நாடுகள், ஆப்ரிக்க தலைவர்கள் கொண்டாட தொடங்கி உள்ளன. இந்தியாவின் உதவியை இனி ஆப்ரிக்க நாடுகள் என்று மறக்காது என்று சொல்லும் அளவிற்கு இது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆபிரிக்க ஒன்றியம் ஏழு ஆண்டுகளாக முழு உறுப்பினராக வாதிடுகிறது என்று அதன் செய்தித் தொடர்பாளர் எப்பா கலோண்டோ ஏற்கனவே கூறி இருந்தார். இப்போது வரை, தென்னாப்பிரிக்கா மட்டுமே G20 உறுப்பினராக இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஆப்ரிக்காவின் கோரிக்கை நிறைவேறி உள்ளது.
காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, இடம்பெயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக ஆப்ரிக்கா இந்த குழுவில் அதிக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆப்ரிக்க கண்டத்தின் இளம் மக்கள்தொகை 1.3 பில்லியன் ஆகும். இது 2050 இல் இரட்டிப்பாகும். மொத்த பூமியின் மக்களில் நான்கில் ஒரு பங்கைக் ஆப்ரிக்க மக்கள் கொண்டிருப்பர்.
இந்த நிலையில் ஜி 20 குழுவில் ஆப்ரிக்கா இணைவது ஜி 20 நாடுகளுக்கு முக்கியமானதாக மாறும். ஆப்ரிக்காவின் பொருளாதாரத்தை சரி செய்ய, அங்கே உள்ள வளங்களை முறையாக பயன்படுத்த என்று பல்வேறு காரணங்களுக்கு ஜி 20 உதவியாக இருக்கும் . சீனா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடு ஆகும் மற்றும் அதன் மிகப்பெரிய கடன் வழங்குபவர்களில் ஒன்றாகும்.
ரஷ்யா அதன் முன்னணி ஆயுத ஒப்பந்த நாடு ஆகும். வளைகுடா நாடுகள் ஆப்ரிக்க கண்டத்தின் மிகப்பெரிய முதலீட்டாளர்களாக ஏற்கனவே மாறிவிட்டன. துருக்கியின் மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவ தளம் மற்றும் தூதரகம் சோமாலியாவில் உள்ளது. இப்படி ஜி 20 நாடுகள் ஏற்கனவே ஆப்ரிக்கா உடன் நெருக்கமாக உள்ள நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உலக அரசியலையே இது மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ G20 இணையதளத்தின்படி, 18வது G20 உச்சி மாநாட்டின் தீம் "வசுதைவ குடும்பகம்". இது "ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று மொழிபெயர்க்கப்படும் சமஸ்கிருத சொற்றொடர் ஆகும். பழங்கால சமஸ்கிருத இலக்கியங்களில், குறிப்பாக மகா உபநிடதத்தில் இந்த சொற்றொடர் இருந்தது. மனிதர்கள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட அனைத்து உயிர்களின் மதிப்பையும், பூமி மற்றும் பரந்த பிரபஞ்சத்தில் நாம் எல்லோரும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடக்க உள்ளது. அதை உணர்த்தும் விதமாக இந்த குழுவில் ஆப்ரிக்காவும் சேர்க்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications