“ஒரு டவுட்டு”.. மனைவியை வைத்து சூதாடியது திறமையா? பாயிண்டை பிடித்த செந்தில்குமார்.. ஆளுநரிடம் கேள்வி
"எனக்கு ஒரு டவுட்டு! அந்த 5 பேர் தங்களின் பொதுவான மனைவியை வைத்து சூதாடினர்களே.. அது எந்த வகையான திறமையின் கீழ் வரும் ரவி?"
சென்னை: தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நிறைவேற்றிய அவசர சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மாநில அரசுகள் மூலம் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சொன்ன வீடியோவை பகிர்ந்து திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த பலர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தனர். அவர்கள் மனமுடைந்த அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலர் இதற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தினர். இதனை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது.

அவசர தடை சட்டம்
அன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை இயற்றி ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

47 பேர் பலி
இந்த நிலையில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ரவி காலதாமதம் செய்ததால் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது. இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்துள்ளது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான அவசர சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். அத்துடன் அவர் 8 கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்பி செந்தில்குமார் கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள திமுக எம்பி செந்தில்குமார், "சூதாட்டத்தை திறமையின் விளையாட்டு என கூறி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார். எனக்கு ஒரு டவுட்டு! அந்த 5 பேர் தங்களின் பொதுவான மனைவியை வைத்து சூதாடினர்களே.. அது எந்த வகையான திறமையின் கீழ் வரும் ரவி?"

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
ஒரு பக்கம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் மாநில அரசிடம் அழுத்தம் கொடுத்து ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளை தடை செய்ய வலியுறுத்துகிறார். ஆனால் மேதாவி ரவி சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்கிறார். நீங்க உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவு பண்ணுங்க." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications