மமகவுக்கு சீட் தருமா திமுக? இன்று சென்னையில் பொதுக்குழு கூட்டம்! மக்களவைத் தேர்தல் பற்றி ஆலோசனை
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைமைப் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் இதற்காக ஆயத்தமாகி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றன. இது வரை திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 தொகுதிகளை வென்றது.

2019 மக்களவைத் தேர்தலில் மமக திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்தாலும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்த வரும் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது . இந்த நிலையில் இன்று இது தொடர்பாக பொதுக்குழுவை கூட்டி மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்கள். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது அறிவிப்பு வெளியிட்டார்.
அதில், "மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைமைப் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் பிப்ரவரி 7 ஆம் தேதி கூடுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு, மமக வின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இப்பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் இப்பொதுக் குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்பது? 2019 ஆம் ஆண்டை போன்று இம்முறையும் திமுக மக்களவைத் தொகுதிகளை ஒதுக்காவிட்டால் என்ன செய்வது? என்பது போன்ற பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications