அதுக்கே நேரம் சரியா இருக்கு தம்பி.. ஆளுநரை விமர்சித்து பறக்கும் மீம்ஸ்! ட்ரெண்டாகும் Get Out Ravi !
சென்னை : ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். மீம் க்ரியேட்டர்கள் தமிழக ஆளுநர் ரவியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றது முதலே தொடர்ந்து எதிர்வினையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். தமிழக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உயிர்களைக் குடிக்கும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்யும் வகையில், தமிழக அரசு உருவாக்கிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் ஆளுநர் ரவி.
ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் எதற்கு என முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வியைச் சுட்டிக்காட்டி மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகின்றனர். இதனால், #GetOutRavi ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த 24 மணி நேரம் என்ன நடந்தது? பார்க்க கூட நேரம் தராத ஆர்.என் ரவி.. தீவிரமாக முயன்ற திமுக.. பின்னணி
கெட் அவுட் ரவி
தமிழக ஆளுநர் ரவி, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலந்தாழ்த்தி வரும் நிலையில், ஒருபக்கம் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை தொடர்ந்து வருகிறது. இந்த மரணங்களுக்கு ஆளுநரே பொறுப்பு என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் ஆளுநருக்கு எதிராக குரல்கள் கடுமையாக எழத் தொடங்கி இருக்கின்றன. மீம் க்ரியேட்டர்களும் தங்கள் பங்கிற்கு ஆளுநரை விமர்சித்து அதகளம் செய்து வருகின்றனர்.
தேவையில்லாதவை
உலகிலேயே மிகவும் பயனற்றவை இவைதான் எனக் குறிப்பிட்டு ஒரு மீமை பகிர்ந்துள்ளார் திமுக ஐடி விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. அவர் வெளியிட்டுள்ள படத்தில், இருபுறமும் பாதை இருக்க நடுவில் மட்டும் தேவையற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கேட், தவறுதலாக காஃபி மக்கிற்குள் இருக்கும் கைப்பிடி, ஆட்டுக்கு இருக்கும் தாடி ஆகியவற்றோடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் படமும் இடம்பெற்றுள்ளது.
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும்
"அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரைக்கு எதிராகப் பேசுவதை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடு மதச்சார்பற்றது. ஆனால் ஆளுநர் ஒரு மதத்திற்கு ஆதரவாகப் பேசி வருகிறார். அது அரசியலமைப்புக்கு எதிரானது" எனக் குறிப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? எனக் கேள்வி எழுப்பி படத்தைப் பதிவிட்டுள்ளார்.
உயிர்நாடி பிரச்சனையை துச்சமாக மதிப்பதா?
தமிழக அரசு நிறைவேற்றி, ஆளுநர் ரவி கிடப்பில் போட்டிருக்கும் மசோதாக்களின் பட்டியலைப் பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், "சனாதானத்தை காப்பதற்காக வாய் கிழிய பரப்புரை செய்யும் ஆளுனர், மக்களின் உயிர்நாடி பிரச்சனையை துச்சமாக மதிப்பது ஏன் ? இது தான் சனாதனமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுக்கே நேரம் சரியா இருக்கு தம்பி
ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றிய மீம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் நெட்டிசன் ஒருவர். அதில், "சட்ட மசோதா நிறைவேற்றி இருக்கோம், ஒப்புதல் கொடுங்கனு சொல்றாங்க தம்பி.. எனக்கு சனாதன தர்மம் பற்றி பேசுறதுக்கே நேரம் சரியா இருக்கு தம்பி" என ஆளுநர் சொல்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.