குட் மூவ் எடுத்து சர்ப்ரைஸ் தந்த ஓபிஎஸ்.. தென் மாவட்ட கணக்கு தலைகீழாக மாறுது! இது திமுகவின் பிளான் B
சென்னை: ஒருவழியாக ஓபிஎஸ் திமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார்.. அந்தவகையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அரசியல் பயணம் ஒரு மிகமுக்கியமான திருப்புமுனையில் வந்து இப்போது நின்றுள்ளது.. தற்போது எடுத்துள்ள இந்த முடிவு எந்த அளவுக்கு சாத்தியம்? திமுகவால் ஓபிஎஸ்ஸுக்கு நன்மை? ஓபிஎஸ்ஸால் திமுகவுக்கு என்ன நன்மை?? ஓபிஎஸ்ஸின் கடைசி இன்னிங்ஸ், அவருக்கு கை கொடுக்குமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..
ஒருகாலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நிழலாகவும், இக்கட்டான நேரங்களில் அதிமுகவின் ஆபத்பாந்தவனாகவும் இருந்தவர், இன்று அதே கட்சியின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், திமுகவின் கோட்டைக்குள் வந்துள்ளார்..

ஜெயலலிதா
ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையை பெற்றவர் என்ற அடையாளம் அவருக்கு இருந்தது.. கட்சியில் எத்தனை பெரிய நெருக்கடி வந்தாலும், இடைக்கால முதல்வராக பொறுப்பேற்று கட்சியை காப்பாற்றியவர் என்ற மரியாதையும் அவருக்கிருந்தது.. ஆனால், காலப்போக்கில் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப்போர், அவரை தனிமைப்படுத்தியதோடு, அவரது அரசியல் அடித்தளத்தையே பலவீனப்படுத்தியது..
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அதிகார மையம் உருவான பிறகு, ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு கட்சிக்குள் படிப்படியாக குறைந்தது.. கட்சியின் கட்டுப்பாடு, அமைப்பு, மற்றும் அதிகாரம் அனைத்தும் அவரது கைகளிலிருந்து விலகியது..
கடினமான பாதை
இந்த சூழ்நிலையில், தனித்து அரசியல் நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறியது.. இதனால், தனது அரசியல் எதிர்காலத்தையும், தனது ஆதரவாளர்களின் நிலையும் பாதுகாக்க, புதிய அரசியல் தளத்தை தேட வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டது..
இந்த சூழ்நிலையில், திமுகவுடன் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கம், 2 தரப்புக்குமே ஒரு சிறந்த அரசியல் நகர்வு என்றே சொல்லலாம்..
ஏனென்றால் திமுகவின் பார்வையில், இது வெறும் ஒரு தலைவரை இணைத்துக்கொள்ளும் முயற்சி கிடையாது.. அதிமுகவின் வாக்கு வங்கியில் உடைப்பு ஏற்படுத்தும் அரசியல் வியூகம் ஆகும்..
குறிப்பாக தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்க்கென்று இன்றும் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு, திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் மறைமுக பலனாக அமையக்கூடும்.. இது அதிமுகவின் வாக்குகளை நேரடியாக திமுகவுக்கு மாற்றவில்லை என்றாலும், எதிர்க்கட்சியின் வலிமையை குறைக்கும் முக்கிய காரணியாக செயல்படலாம்.
துருப்பு சீட்டு
எடப்பாடியின் பிடிக்குள் இருக்கும் கொங்கு மண்டலத்தைத் தாண்டி, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க ஓபிஎஸ் ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுவார் என்று திமுக மேலிடம் கணக்கு போடுகிறது..
இது வெறுமனே ஒரு நபரை இணைத்துக்கொள்ளும் முயற்சி மட்டுமல்ல, அதிமுக என்ற பேரியக்கத்தை வேரோடு சாய்க்க திமுக எடுக்கும் ஒரு மேஜிக் மூவ் என்றே சொல்லலாம்.. அதனால்தான், திமுகவின் மிகத்தெளிவான ப்ளான் B என்று இதனை அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கிறார்கள்..
மறுபுறம், ஓபிஎஸ்ஸின் பார்வையில், இது அவரது அரசியலை உறுதி செய்யும் முயற்சி என்றும் சொல்லலாம். பாஜகவின் ஆதரவு தனக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதை இந்நேரம் அவர் உணர்ந்திருக்கக்கூடும்... எனவேதான் பாஜக தலைமையிலிருந்து எதிர்பார்த்த அளவிலான அரசியல் ஆதரவு கிடைக்கவில்லை என்ற அரசியல் உணர்வு, அவரை புதிய அரசியல் வாய்ப்புகளை தேட செய்திருக்கலாம்.
கசப்பான முடிவு?
தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ஒரு கட்சியின் நிழலில் தஞ்சமடைவது என்பது கொள்கை ரீதியாக அவருக்குச் சவாலாக இருந்தாலும், தனது மகன்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் இந்த கசப்பான முடிவை எடுக்க துணிந்திருப்பதாகவே தெரிகிறது..
அதேபோல அதிமுகவில் தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு பழிவாங்கவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பாடம் புகட்டவும் திமுகவே சரியான களம் என்று ஓபிஎஸ் நினைக்க நிறைய வாய்ப்புண்டு.
ஆனால், ஏற்கனவே திமுகவில் இருக்கும் அவரது பரம எதிரியான தங்கத்தமிழ்ச்செல்வன் போன்றவர்களுடன் ஒரே மேடையில் அவர் எப்படிப் பயணிக்கப் போகிறார் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி..
வலுவான கூட்டணி
அதுமட்டுமல்ல, அரசியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற, ஒரு வலுவான கூட்டணியின் ஆதரவு அவசியம் என்பதை ஓபிஎஸ் உணர்ந்திருக்கிறார்.. தனித்து செயல்பட்டால் அரசியல் ரீதியாக மறைந்து போகும் அபாயம் இருந்த நிலையில், ஆளும் கட்சியுடன் இணைவது, அவருக்கு ஒரு பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியை வழங்கும் முயற்சியாகும்.
அதே நேரத்தில், இது அவரது நீண்டகால அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஒரு மறைமுக பதிலடி என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த அரசியல் நகர்வு எவ்வளவு வெற்றிகரமாக அமையும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.. ஏனென்றால் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் இந்த புதிய அரசியல் பாதையை முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா, அல்லது இது அவரின் அரசியல் அடையாளத்தை மேலும் பலவீனப்படுத்துமா என்பது காலத்தின் கையில் உள்ளது.
அதிகார சமநிலை
அதேபோல், திமுகவுக்கும் இது முழுமையான பலனாக மாறுமா அல்லது தற்காலிக அரசியல் லாபமாக மட்டுமே முடிவடையுமா என்பதும் எதிர்கால தேர்தல்களில் தான் தெளிவாகும்..
ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.. இன்றைய அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதற்கான இன்னொரு உதாரணமாக இந்த நகர்வு மாறியுள்ளது. கொள்கைகளை விட அரசியல் பிழைப்பும், அதிகார சமநிலையும் தான் இறுதியில் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கிறது என்பதையும் இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications