பொட்டு தங்கமாவது வாங்கிடுங்க மக்களே.. இனி நினைச்சு கூட பார்க்க முடியாது! நிபுணர்கள் கொடுத்த அட்வைஸ்!
சென்னை: இந்தியாவில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலை, அடித்தட்டு மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. அதே நேரத்தில், நடுத்தர மக்களுக்கு தங்கம் தொடர்பாக பல கேள்விகள் இருக்கிறது. இன்னும் தங்கத்தின் விலை அதிகரிக்குமா? விலை உயர என்ன காரணம்? தற்போதைக்கு தங்கம் வாங்கலாமா? என கேட்கின்றனர். அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இந்த கட்டுரை..
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமணங்கள், பண்டிகை காலம் ஆகியவற்றில் மக்கள் தங்கம் வாங்குவதால் சந்தையில் எப்போதும் தேவை அதிகமாகவே இருக்கும். ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தினசரி சாதனை படைத்து வருகிறது.
இதனால் பொதுமக்கள், "இன்னும் தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?" என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும், முதலீட்டு ரீதியாகவும், தங்கத்தின் மீதான் கவனம் அதிகரித்திருக்கும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்யலாமா? என்ற கேள்வியும் எழுத்துள்ளது.

தங்கம் விலை அதிகரிக்க காரணம்
சர்வதேச காரணங்கள் - அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார மந்தநிலை, வட்டி விகிதக் குறைப்பு, பங்கு சந்தை அதிர்வு ஆகியவை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். இதனால் சர்வதேச சந்தையில் விலை உயரும்; இந்தியாவிலும் அதே தாக்கம் உண்டாகும். மேலும், உலகில் அதிக தங்கம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. திருமணங்கள், விழாக்கள், சேமிப்பு வழக்கம் ஆகிய காரணங்களால் தேவை அதிகமாகவே இருக்கும்.
இந்திய ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக குறைந்தால் தங்கத்தின் விலை கூடும். சமீபத்தில் ரூபாய் மதிப்பு குறைந்திருப்பதும் ஒரு காரணம். போர் மற்றும் உலக அரசியல் பதற்றம் போன்றவை உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கச் செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 2019 முதல் விலை ஏற்றம் மிகத் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை கடந்துள்ள கவனிக்கத்தக்கது.
விலை உயர்வு வரலாறு
கடந்த 2019 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் சுமார் ரூ35,000 முதல் ரூ.38,000 என்ற விலைக்கு விற்பனையானது 2020 காலகட்டத்தில் கொரோனா காலத்தில் முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகமாக வாங்கியதால், விலை ரூ.50,000 என்ற அளவில் கடந்து சென்றது. 2021 - 2022 சில மாதங்களில் விலை குறைந்தாலும், சராசரியாக ரூ.47,000 , ரூ.52,000 என்ற அளவில் நீடித்தது. 2023ஆம் ஆண்டில் மீண்டும் உயர்ந்து ரூ.60,000 என்ற அளவில் இருந்தது. 2024 வரை கிட்டத்தட்ட அதே அளவில் இருந்த நிலையில், தற்போது 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1 லட்சம் வரை உயர்ந்துள்ளது. சில நாட்களில் அதன் விலை புதிய உச்சத்தையும் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை உயருமா?
சர்வதேச பொருளாதார நிலைமை இன்னும் உறுதியில்லாமல் இருப்பதால் தங்க விலை குறைய வாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும், போர் உள்ளிட்டவைகளால், மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்தால் விலை மேலும் உயரும் அபாயமும் உள்ளது. ஆனால், ஒரே மாதிரியாக தொடர்ந்து அதிகரிக்காது, இடையிடையே சிறிய குறைப்புகள் இருக்கலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
தங்கம் வாங்கலாமா?
திருமண விழாக்கள் போன்ற உடனடி தேவைக்காக வாங்குபவர்கள் தவறாமல் தங்கத்தை உடனே வாங்க வேண்டியது அவசியம். விலை குறையும் எனக் காத்திருப்பது ஆபத்தாகவே அமையும். முதலீட்டுக்காக வாங்குபவர்கள் முழுமையாக தங்கத்தை மட்டுமே நம்பாமல், சிறிது பகுதியை தங்கத்தில் நகைகளாக அல்லாமல் தங்க நாணயம், தங்க பத்திரங்கள், தங்க ETF ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. விலை மேலும் உயரும் சாத்தியம் இருப்பதால், கட்டுக்கோப்பான முறையில் தவணையாக (SIP போல) தங்கம் வாங்குவது பாதுகாப்பான வழி என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நிபுணர்கள் கணிப்பு
தங்கம் இந்தியர்களின் பாரம்பரிய சேமிப்பு வழக்கம். விலை எவ்வளவு உயர்ந்தாலும், தேவைக்கேற்ப மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த முடியாது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஒரே நேரத்தில் அதிக அளவில் வாங்காமல், படிப்படியாக வாங்குவது பாதுகாப்பான நடைமுறை என்று பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications