விடிவு காலம் பிறக்குது.. இனி டிக்கெட் புக்கிங் ஈசியாகிடும்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ஐஆர்சிடிசி
சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரி செய்து, டிக்கெட் புக்கிங் திறனை மேம்படுத்தும் பணிகளை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதும் பணம் கழிக்கப்பட்டு டிக்கெட் உறுதியாகாமல் போவது போன்ற பிரச்சினைகள் இனி ஏற்படாது என்று ரயில்வே வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
ரயில்களில் தொலை தூர பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி உள்ளது. ரயில்வே கவுன்டர்களுக்கு நேரடியாக சென்று டிக்கெட் புக்கிங் செய்யும் பழக்கம் பயணிகள் இடையே படிப்படியாக குறைந்து வருகிறது. பெரும்பாலானோர் தற்போது ஆன்லைன் வழியாகவே டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.

ஐஆர்சிடிசியின் செயலி மற்றும் வெப்சைட் மூலமாகவே பெரும்பாலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால், ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்வதற்குள் சில நேரங்களில் பொறுமையின் எல்லைக்கே செல்ல நேரிடும். குறிப்பாக தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பயணியின் பெயர் உள்ளிட்டவற்றை பதிவு செய்து விட்டு சப்மிட் கொடுத்தால் அடுத்த பக்கத்திற்கு செல்ல நீண்ட நேரம் எடுக்கும்.
இதனால், வினாடிகளை எண்ணிக்கொண்டு டிக்கெட் கிடைக்குமா? கிடைக்காதா என பயணிகளுக்கும் பரபரப்பு ஏற்பட்டு விடும். இது ஒரு பிரச்சினை என்றால், சில நேரங்களில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது, பணம் அக்கவுண்டில் இருந்து எடுத்துக்கொண்ட பிறகும் டிக்கெட் வராமல் போய்விடும். இது பயணிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
பல லட்சம் பேர் பயன்படுத்தும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதுபோன்ற டெக்னிக்கல் பிரச்சினைகள் ஏற்படாமல் செயலியை மேம்படுத்த வேண்டும் என்பது பயணிகள் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில்தான் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்து இருக்கிறதாம்.
டிக்கெட் புக்கிங் திறனை மேம்படுத்தும் விதமாக ஐஆர்சிடிசியை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டதாகவும் மார்ச் 2025ல் இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பயணிகள் டிக்கெட் புக் செய்யும் போது எந்த சிக்கலும் இன்றி குறுகிய நேரத்தில் டிக்கெட்டை பதிவு செய்ய முடியும் என்றும், பணம் கழிக்கப்பட்டு டிக்கெட் வராமல் போகும் பிரச்சினையும் சீர் செய்யப்படும் எனவும் கூறப்படுகின்றனர்.
மேலும், டிக்கெட் புக்கிங்கின் போது பயணிகள் எந்த சிரமமும் இன்றி புக் செய்வது உறுதிபடுத்தப்படும் என்றும் ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன. பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நீண்ட நேரம் பிடிப்பது உள்ளிட்ட சிரமத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஐஆர்சிடிசி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சஞ்செய் ஜெயின் பேசுகையில், "டிக்கெட் புக்கிங் திறன் குறைவாக இருப்பதால் இத்தகைய பிரச்சினை ஏற்படுகிறது.
அதாவது, ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய வரும் பயணிகள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது புக்கிங் கெப்பாசிட்டி குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த பிரச்சினையை பயணிகள் எதிர்கொள்கிறார்கள்" என்று கூறியிருந்தார். தற்போது, நாள் ஒன்றுக்கு 9 லட்சம் டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்யப்படுகின்றன. நாள் ஒன்றிற்கு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடியாகும்.
கடந்த ஆண்டு டிக்கெட் புக்கிங் திறனை ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் என்று இருப்பதை 2.25 லட்சமாக உயர்த்த ரயில்வே முடிவு செய்தது. பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் அமைப்பின் திறனை மேம்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் என இரண்டுமே மேம்படுத்தப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சரும் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications