கொல்கத்தாவில் யோகா செய்யும் பிரதமர் மோடி.. 12வது சர்வதேச யோகா தினம் கொண்டாட்டங்கள் உற்சாகம்
டெல்லி: யோகா என்பது உடலையும் மனதையும் இணைக்கும் ஒரு கலை. இந்த யோகாவின் அற்புத பலனை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026ஆம் ஆண்டின் இந்த யோகா தினம், முதியவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுக்க பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
உலகம் முழுவதும் இன்று ஜூன் 21ம் தேதி 12-வது சர்வதேச யோகா தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா எடுத்த முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த யோகா தினம், இன்று ஒரு சர்வதேச அளவில் முக்கியமான ஒரு நாளாக மாறியுள்ளது. ஆரோக்கியம் மற்றும் அமைதிக்கான அடையாளமாகத் திகழும் இந்த யோகா தின கொண்டாட்டங்கள் நாடு முழுக்க சிறப்பாக நடந்து வருகிறது.

பிரதமர் மோடி
இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களிலும் யோகா தினத்தைக் கொண்டாடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய நகரத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார். அதன்படி இந்தாண்டு கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரெட் ரோடு' பகுதியில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகா செய்தார்.
இந்த ஆண்டு "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்ற தலைப்பில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. வயதான காலத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், மன நலனை மேம்படுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல், முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்கும் திறனை வளர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தியே யோகா தின கொண்டாட்டம் நடைபெறுகிறது.
யோகா தின கொண்டாட்டம்
இந்த ஆண்டு யோகா தினக் கொண்டாட்டங்கள் உலகெங்கிலும் சுமார் 2,500 இடங்களில் நடைபெறுகின்றன. இதில் 210க்கும் மேற்பட்ட இந்தியத் தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு அலுவலகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும். இது யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உலகளாவிய ஒற்றுமைக்கான ஒரு கருவி என்பதையே காட்டுகிறது.
தலைவர்கள்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய தலைவர்கள் யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரகலாத் நகர் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, அகமதாபாத் மேயர் ஹிதேஷ் பரோட் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான நார்வே தூதர் மே-எலின் ஸ்டீனரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
#WATCH | West Bengal | Prime Minister Narendra Modi performs Yoga on the occasion of the 12th International Day of Yoga in Kolkata.
— ANI (@ANI) June 21, 2026
The theme for this year's Yoga Day is 'Yoga For Healthy Ageing'
(Video Source: DD News) pic.twitter.com/uenZKDPetf
யோகா தினம்
2014ஆம் ஆண்டு ஐநா சபையில் பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, 2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications