நாடு முழுக்க தொடங்கியது நீட் மறுதேர்வு! தமிழகத்தில் மட்டும் 1.4 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று, ஜூன் 21-ம் தேதி, நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் லீக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மறுதேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை எவ்வித முறைகேடுகளும் இன்றி, பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடத்தத் தேசிய தேர்வு முகமை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மதியும் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு நடந்து வருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீட் தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. முழுவதும் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்தியா முழுவதும் 551 நகரங்களில் உள்ள 5,440 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்வு
தமிழகத்தில் இந்தத் தேர்வை எழுத மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராக உள்ளனர்.. 307 தேர்வு மையங்களில் சுமார் 1.42 லட்சம் மாணவ-மாணவியர் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 42 மையங்களில் சுமார் 21,000 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். நாடு முழுக்க இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் தேர்வு, மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்பு
தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் NTA முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. நீட் நடக்கும் 95,000க்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில் 1,38,560 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் லைவ் காட்சிகளைத் தேசிய மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள்.
கேமரா காட்சிகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தெரிந்தால், அதை உடனடியாகக் கண்டறியச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு சாதனங்கள் மூலம் காப்பியடிப்பதைத் தடுக்க, தேர்வு மையங்களில் 51,311 மொபைல் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 38,795 ஊழியர்கள் மாணவர்களைச் சோதனை செய்யவும் , 48,448 ஊழியர்கள் பயோமெட்ரிக் சரிபார்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்பாடுகள்
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்கள் வசதியாகத் தேர்வு எழுதவும் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. தேர்வு மையங்களில் குடிநீர், ஓஆர்எஸ் மற்றும் பெற்றோர்கள் காத்திருக்க நிழலான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடது கை பழக்கம் கொண்ட மாணவர்களுக்கு வசதியாக, வினாத்தாள் புத்தகத்தில் எழுதுவதற்கு ஏற்ற வகையில் சிறப்பு இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் கசிவதைத் தடுக்க வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும், விடைத்தாள்களைச் சேகரிக்கவும் வங்கி மற்றும் தபால் துறைகளின் உதவி பெறப்பட்டுள்ளது.
ரயில்கள்
சென்னையைப் பொறுத்தவரை நீட் தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக, இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், வார நாட்களைப் போலவே ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் வினாத்தாள் கசிவு போன்ற போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று NTA எச்சரித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications