முதல் மனைவி மீது திருப்பி புகார் கொடுத்த சரவணன்... பின்னணியில் கார் ஷெட், போலி ஆவணம், 7 வருட வழக்கு!
சென்னை: நடிகர் சரவணனின் குடும்ப வாழ்க்கையை சுற்றி கடந்த சில நாட்களாக கிளம்பிய சர்ச்சை, இப்போது நேரடியாக காவல் நிலைய வாசலிலேயே வந்து நின்றிருக்கிறது. "என் உயிருக்கு எதுவானாலும் சரவணன்தான் காரணம்" என்று முதல் மனைவி சூர்யஸ்ரீ புகார் கொடுத்த நிலையில், அதற்கு பதிலடியாக நடிகர் சரவணனும் தற்போது போலீசில் நேரில் சென்று புகார் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
"என் மீது கொடுக்கப்பட்டிருப்பது பொய்யான புகார்" என்று மட்டும் இல்லாமல், இந்த பிரச்சனையின் பின்னால் அடுக்குமாடி குடியிருப்பின் கார் ஷெட், நண்பரின் துரோகம், போலி ஆவணங்கள், 7 வருட நீதிமன்ற போராட்டம் வரை இருப்பதாக சரவணன் கூறியிருப்பது விஷயத்தை இன்னும் பெரிதாக்கி இருக்கிறது.

சரவணன் தரப்பு அதிரடி
மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் தனது இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி, 9 வயது மகன் மற்றும் வழக்கறிஞர்களுடன் நேரில் சென்ற நடிகர் சரவணன், முதல் மனைவி சூர்யஸ்ரீ தன் மீது அளித்திருக்கும் புகார் முற்றிலும் பொய்யானது என்று கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், "நான் முதல் மனைவியை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போய் களி திங்கும் அளவுக்கு முட்டாளில்லை. எனது வாழ்க்கை இப்போது மனைவி, குழந்தையுடன் சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது. யாருடைய உயிருக்கும் நான் ஆபத்து இல்லை என்பதைத்தான் சொல்ல வந்திருக்கிறேன்" என்று நேரடியாக பதிலளித்தார்.
சரவணனின் இந்த பதில் வெறும் மறுப்பு மாதிரி இல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக உள்ளே உள்ள குடும்பச் சிக்கல்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக "நாங்கள் எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாகவே போயிருக்கிறோம், குழந்தையையும் முதல் மனைவி கவனித்திருக்கிறார், இப்போது திடீரென்று உயிருக்கு ஆபத்து என்கிற நிலைக்கு விஷயம் போய்விட்டது" என்று அவர் கூறியது, இந்த பிரச்சனை ஒரு நாளில் உருவானது அல்ல என்பதை காட்டுகிறது.
திருமணம் சர்ச்சை
சரவணன் பேசியதில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு விஷயம், "எனக்கும் ஸ்ரீதேவிக்கும் திருமணம் செய்து வைத்ததே சூர்யஸ்ரீ தான்" என்ற தகவல்.
"12 ஆண்டுகளாக நான் ஸ்ரீதேவியுடன் வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். இந்த குடும்பம் எப்படி இருந்தது, யார் யாருக்கு என்ன உறவு இருந்தது என்று எல்லாம் தெரிந்தவங்க தெரிஞ்சிக்கலாம். இப்போ யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு வேறு மாதிரி விஷயங்கள் நடக்குது" என்று கூறி இருக்கிறார்.
கார் ஷெட் பிரச்சனை
இந்த விவகாரத்தில் அதிகமாக பேசப்படும் புதிய திருப்பம், சரவணன் கூறிய அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங்/ஷெட் பற்றிய குற்றச்சாட்டுதான். அது பற்றி அவர் பேசும்போது, அந்த இடத்தை தன்னுடைய நண்பர் ஒருவர் கடையாக பயன்படுத்தி வந்தாராம். ஆரம்பத்தில் நெருக்கமானவராக இருந்த அந்த நபர், பின்னர் சரவணனுக்கே தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் அந்த இடத்தை தன் மனைவியின் பெயருக்கு மாற்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்காகவே தாம் கடந்த ஏழு ஆண்டுகளாக வழக்கு நடத்தி வந்ததாகவும், சமீபத்தில் அந்த வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பு வந்திருப்பதாகவும் சரவணன் கூறியுள்ளார். அதாவது, இந்த சொத்து/பயன்பாட்டு உரிமை பிரச்சனையில் நீதிமன்றம் தன் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதும், அதற்குப் பிறகுதான் இப்போது முதல் மனைவி அந்த நபரின் பேச்சைக் கேட்டு மீண்டும் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது போல அவர் பேசுகிறார்.
மேலும் "என் நண்பராக இருந்த ஒருவரின் சொல்லை கேட்டு, அவருக்காகவே இப்படி செய்கிறார்" என்ற அவரது குற்றச்சாட்டு, இந்த வழக்கை குடும்பத் தகராறை தாண்டி சொத்து மற்றும் நம்பிக்கை துரோகம் கலந்த சர்ச்சையாக மாற்றி இருக்கிறது.
சரவணன் சொன்ன விளக்கம்
முதல் மனைவி அளித்த புகாரில் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சரவணன் ஆளை வைத்து அகற்றிவிட்டார் என்பதுதான். இதற்கும் அவர் தனியாக விளக்கம் கொடுத்துள்ளார்.
"அந்த கேமரா எங்கள் வீட்டில் இருந்தாலும் அந்த மூன்றாம் நபரின் வீட்டில் தான் டிவிஆர் இருந்தது. அதனால்தான் அதை நீக்கினேன். இப்போ காவல்துறையின் வழிகாட்டுதலோடு தேவையான இடத்தில் மீண்டும் கேமரா வைக்க முடிவு செய்திருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
அதே சமயம், இனிமேல் தன்னை பற்றி இவ்வாறான அவதூறு பரப்பினால் அதற்கெதிராக தனியாக வழக்கு தொடரவும் தயார் என்று அவர் கூறியிருப்பது, இந்த விவகாரம் இன்னும் சட்ட ரீதியாக நீள வாய்ப்புள்ளது என்பதை உணர்த்துகிறது.
ஒரே நேரத்தில் பல வழக்கு
சரவணனின் பேட்டியில் இருந்து தெரியும் முக்கிய விஷயம் என்னவென்றால், இது ஒரு "உயிருக்கு ஆபத்து" புகார் மட்டுமல்ல. அதற்குள் ஜீவனாம்சம் வழக்கு, விவாகரத்து வழக்கு, கார் பார்க்கிங் உரிமை பிரச்சனை, இரண்டாவது திருமணம் தொடர்பான சட்ட சிக்கல் என்று பல அடுக்குகள் இருக்கின்றன.
முதல் மனைவி ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அதற்கு எதிராக தாம் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், தாம் விவாகரத்து வழக்கையும் தொடர்ந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால், இந்த குடும்பப் பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளே இருந்தது, இப்போது மட்டுமே வெளியில் வெடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications