5 கிமீ இனி சுற்றத் தேவையில்லை.. மொத்த வடசென்னைக்கும் லட்டு மாதிரி நியூஸ்.. ரெடியான சூப்பர் மேம்பாலம்
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு மேயர் சிட்டிபாபு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாலம் காரணமாக கொளத்தூர் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டியதில்லை.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:
சென்னை கொளத்தூர் தொகுதியில் வில்லிவாக்கம் ரெயில்நிலையம் அருகில் கிழக்கு சந்திக்கடவு சாலையில் அண்ணாநகர் மற்றும் கொளத்தூர் பகுதியை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்துக்கு மேயர் சிட்டிபாபு மேம்பாலம் என்று பெயர் சூட்டவேண்டும் என்று அரசாணை வழங்கும்படி அரசுக்கு, சென்னை மாநகராட்சி கமிஷனர் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த ரெயில்வே மேம்பாலம் ரூ.61.98 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கொளத்தூர் பொதுமக்கள் அண்ணாநகர் சென்று வருவதற்காக பெரம்பூர், அயனாவரம் வழியாக 5 கி.மீ. தூரம் சுற்ற வேண்டியுள்ள நிலையில், இந்த பாலம் மூலம் 5 நிமிடத்தில் அவர்கள் அங்கு சென்றுவரமுடியும்.
எனவே இது மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ள திட்டமாக உள்ளது என்றும், சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். அவர் கேட்டுக்கொண்டப்படி, அந்த பாலத்துக்கு மேயர் சிட்டிபாபு மேம்பாலம் என்று பெயர் சூட்டுவதற்கு சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications