கேப் டிரைவர் சம்பளம் 1 லட்சமா.. ஆடிப்போன சிஇஓ.. புலம்பும் ஐடி ஊழியர்கள்!!
ஒரு காலத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும் சரி, மாதம் மாதம் நிலையான சம்பளம் கிடைக்கும் வேலைதான் பாதுகாப்பான வாழ்க்கைக்கான அடையாளமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது டிஜிட்டல் தளங்கள், ஆப் அடிப்படையிலான சேவைகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் வளர்ந்துவரும் சூழலில், காலம் காலமாக இருந்த வேலைகளை விட அதிக வருமானம் ஈட்டும் புதிய தலைமுறை வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாக ஒரு சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன அடிப்படையிலான டெலிவரி சேவை நிறுவனமான Zypp Electric நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகாஷ் குப்தா பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் கிக் ஊழியர்களின் வருமானம் எப்படி படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதை விளக்கும் வகையில், Zypp Electric நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆகாஷ் குப்தா ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் ஒரு கேப் டிரைவரின் வருமானம் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கேப் டிரைவரின் வருமானம் 1 லட்சம் ரூபாய்!
Zypp Electric நிறுவனத்தின் சிஇஓ ஆகாஷ் குப்தா, ஒரு கேப் டிரைவர் உடன் பயணம் செய்த போது, அவருடன் பேசுவதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த டிரைவர் தினமும் 10 மணி நேரம் வேலை செய்வதாகவும், அதன் மூலம் நாளுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அவரது மொத்த மாத வருமானம் ரூ.1 லட்சம் வரை செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வருமானம், முன்பு அவர் வேறு ஒரு வேலையில் பெற்ற சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய சம்பளம் 25,000 ரூபாய் மட்டுமே
இந்த கேப் டிரைவர், முன்பு வேறு ஒரு வேலையில் பணியாற்றியபோது மாதம் ரூ.25,000 மட்டுமே சம்பளம் பெற்றதாக தெரிவித்தார். தற்போது கேப் டிரைவராக சுயதொழில் செய்வதன் மூலம், அவரது வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தனது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.
"கிக் என்டர்பிரெனியர்" என்று பாராட்டிய CEO
இந்த டிரைவரின் வருமானத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த CEO ஆகாஷ் குப்தா, அவரை "கிக் என்டர்பிரெனியர்" (Gig Entrepreneur) என்று அழைத்து பாராட்டினார். அவர், "இவர்கள் வெறும் டிரைவர்கள் அல்ல. தங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் படி வருமானத்தை உருவாக்கும் மைக்ரோ என்டர்பிரெனியர்கள். இவர்கள் தான் இந்தியாவின் அடுத்த மிடில் கிளாஸ் வர்க்கம்" என்று கூறினார்.
இந்த வீடியோவில், கிக் பொருளாதாரம் இந்தியாவில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் CEO விளக்கினார்.
இந்தியாவின் புதிய நடுத்தர வர்க்கம்
இந்த வீடியோவுக்கு 5.97 லட்சத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும், 25,700-க்கும் மேற்பட்ட லைக்களும் கிடைத்துள்ளன. பலர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். கிக் ஊழியர்கள் இப்போது இந்தியாவின் புதிய நடுத்தர வர்க்கத்தின் அடையாளமாக மாறி வருவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ, இந்தியாவில் கிக் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும், அதன் மூலம் பலரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதையும் பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications