திமுக - பாஜக இணக்கம்.. செந்தில் பாலாஜியை விசாரிக்க கவர்னர் ஒப்புதல் அளிக்காதது ஏன்? நிர்மல் குமார்
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர, ஆளுநர் ஆர்.வி. அர்லேகரின் அனுமதியை தமிழக அரசு கோரியிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை அதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முன்னாள் அமைச்சர் என்பதால் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி அவசியம். எனவே, செந்தில் பாலாஜி மீது மேல் நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு அனுமதி கோரி தலைமைச் செயலருக்கு கடந்த மே 15-ம் தேதி அமலாக்கத்துறை தரப்பில் கடிதம் எழுதப்பட்டது.
இதையடுத்து, வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர, ஆளுநர் ஆர்.வி. அர்லேகரின் அனுமதியை தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை அதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இன்று சென்னை தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இந்த தகவலை தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல் குமார் தனது பேட்டியில் கூறியதாவது:- திமுக - பாஜக இடையேதான் இணக்கமான உறவு உள்ளது. அமலாக்கத்துறை சார்பாக ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதியிருந்தது. இதுவரை கவர்னர் ஏன் ஒப்புதல் கொடுக்கவில்லை. செந்தில் பாலாஜி உள்பட ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த கோப்புகள் தேங்கி கிடக்கிறது.
கவர்னரும் திமுகவும் பாஜகவும் ஒன்றாக இருக்கிறார்கள். பாஜகவின் மறைமுக முகமாக திமுக இருக்கிறது. பின்னால் இருந்து செய்ய வைப்பதே பாஜகதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ஏன் இன்னும் கையெழுத்து போடவில்லை. அப்போது யாருக்காக கையெழுத்து போடாமல் இருக்கிறார். இதற்கு திமுகவும் பதில் சொல்லட்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications