ரேஷன் கார்டிலிருந்து குழந்தைகளின் பெயர்களை நீக்கக் கூடாது.. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: ஆதார் கார்டு இல்லாத குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படக் கூடாது என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கார்டு மூலம் அந்தந்த மாநில அரசுகளின் கொள்கையின்படி அவரவர் கார்டுகளின் தகுதிக்கேற்ப இலவசமாகவும் குறைந்த விலையிலும் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ரேஷன் கார்டுகளுக்கு என்னென்ன பொருட்களை வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ஆகும். மேலும் இந்த ரேஷன் கார்டுகளில் அரசு உதவித் தொகையும் கிடைக்கும்.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் இலவச கலர் டிவி, இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் திட்டம், கொரோனா நிவாரணம், நகைக் கடன் ரத்து, மாதம் ரூ 1000 திட்டம், பொங்கல் பரிசு உள்ளிட்டவை ரேஷன் கார்டை அடிப்படையாக கொண்டே வழங்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கார்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கைகேற்ப பொருட்கள் விநியோகத்தில் கூடவோ குறைவாகவோ இருக்கும்.
அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காகவே சிலர் வெவ்வேறு முகவரிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலி ரேஷன் கார்டுகளை நீக்கும் பணிகளை அரசு ஒருபுறம் செய்து வருகிறது. அது போல் நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு வெவ்வேறு முகவரியை கொடுத்து பலர் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க ஒரே நபர் பல முகவரியில் ரேஷன் கார்டுகளை வாங்குவதை தடுக்க ஆதார் எண் அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது குடும்பத் தலைவர், உறுப்பினர்கள் என அனைவரின் ஆதார் எண்ணையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதில் 5 வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இருந்தால் பதிவேற்றம் செய்யலாம். இல்லையெனறால் பிறப்புச் சான்றிதழ் வைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் எண் இணைக்காத குழந்தைக்கு 5 வயதுக்கு மேல் ஆனதும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நிலையில் 5 வயதைதாண்டியும் பலர் இன்னும் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.
அவர்களின் பட்டியலை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி ஆதார் எண்ணை பெறுமாறு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த விபரத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தெரிவிக்கவில்லை போலும். அதே நேரம் 5 வயதை தாண்டியும் ஆதார் இணைக்காத குழந்தைகளின் பெயர்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகாரை அடுத்து ஆதார் இணைக்க வேண்டிய குழந்தைகளின் பெற்றோர்களை நேரிலோ அல்லது செல்போனிலோ தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் குழந்தைகளின் பெயரை நீக்கக் கூடாது என்றும் அதே வேளையில் 5 வயதான குழந்தைக்கு பெற்றோரும் ஆதார் எண்ணை பெற்று இணைக்க முன் வரவேண்டும் என்றும் அதிகாரிகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications