சென்னைக்கு குட்நியூஸ்.. ராயபுரம் உள்பட 9 மண்டலங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை
சென்னை: சென்னையில் 9 மண்டலங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என சென்னை மாநகராட்சி நல்ல தகவலை வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கடந்த ஜூன் மாதம் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வந்த கொரோனா தொற்று, ஜூலையில் 2வது வாரத்திற்கு பின்னர் குறைய ஆரம்பித்தது. இப்போது தினமும் சுமார் 1000 பேருக்கு என்கிற அளவில் தான் உள்ளது. நோயாளிகள் குணம் அடையும் விகிதம் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் இப்போது கொரோனா தொற்று நீங்கியுள்ளது. இதையடுத்து அவை நோய் கட்டுப்பாடு பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸெல்லாம் மனபிராந்தி.. வோட்கா குடிப்போம்.. வைரஸை கொல்வோம்.. சொல்வது ஒரு நாட்டின் அதிபர்
கட்டுப்பாட்டு பகுதி
சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று வந்தாலும் அந்த தெரு முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்த காரணத்தால், ஐந்து பேருக்கு தொற்று இருந்தால் தான் அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கும் நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்தது. இதனால் சென்னையில் 200க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்த நிலையில், படிப்படியாக குறைந்தது.
9 மண்டலங்களில் இல்லை
தற்போது 57 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே சென்னையில் உள்ளன. ஆனால் இந்த 57 கட்டுப்பாட்டு பகுதிகளும் சென்னையில் உள்ள 6 மண்டலங்களில் தான் உள்ளது. இதனால் தற்போது சென்னையில் 9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்கிற நிலை உருவாகி உள்ளது.
கோடம்பாக்கம் அதிகம்
சென்னையில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 18 பகுதிகளிலும், கோடம்பாக்கத்தில் 18 பகுதிகளும், அம்பத்தூரில் 16 பகுதிகளிலும் தேனாம்பேட்டையில் 3 இடங்களும், வளசரவாக்கம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தலா ஒரு இடமும் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.
தண்டையார் பேட்டையில் இல்லை
திருவெற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் கூட இல்லை. சென்னையில் 97 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி உள்ள நிலையில் அதில் 82 ஆயிரம் பேர் ஏற்கனவே குணம் அடைந்துவிட்டனர். சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.