'அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்..' அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: வரும் காலங்களில் கல்வித் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வித் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை என்றும் தெரிவித்தார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஜிகே மணி
இந்த பட்ஜெட் மீதான விவாதம் தற்போது தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்று வருகிறது. 3ஆம் நாளான இன்று பாமக சட்டசபை தலைவர் ஜி.கே.மணி பேசினார். அப்போது ஜி கே மணி கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் தடுப்பணைகள் புதிதாகக் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும். உரிய வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்துச் சிறப்பான நீர் மேலாண்மை நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றார்.

கல்வி சீர்திருத்தம்
அதேபோல கல்வி குறித்துப் பேசிய ஜி கே மணி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையிலான கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்றும் இதற்குத் தேவையான சீர்திருத்தங்களை அரசு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும்போது, அது அரசுக்கு பெரும் பயன் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் பதில்
ஜி கே மணியின் கேள்விக்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாடு அரசு இப்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அடுத்த 6 மாதத்திற்கானது தான். வரும் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிவிப்புகளில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வறுமையின் அடையாளம் இல்லை
வரும் ஆண்டுகளில் கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்படும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும். அரசுப் பள்ளிகள் ஒன்றும் வறுமையின் அடையாளம் இல்லை. அரசுப் பள்ளிகளைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டசபையில் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாகப் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்தி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications