ஆளுநர் கான்வாய் தாக்கப்பட்டதா? மயிலாடுதுறையில் நடந்தது என்ன? ஆளுநர் மெய்க்காப்பாளரின் பரபர கடிதம்
சென்னை: ஆளுநர் கான்வாய் வாகனம் மீது கல்லோ கொடிகளோ வீசப்பட்டதாக வெளியான தகவல் குறித்து ஆளுநரின் மெய்க்காப்பாளரின் கடிதம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Recommended Video
மயிலாடுதுறை திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அங்கிருந்து மன்னம்பந்தல் வழியாக தருமை ஆதீனத்திற்கு ஆளுநர் சென்றார்.
தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறையில் இருந்து செல்லும் ரதத்தைத் தொடங்கி வைத்தார்.

கறுப்பு கொடி
இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியைக் கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இதற்கிடையே ஆளுநர் வாகனம் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

போலீசார் விளக்கம்
இந்தத் தகவலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கூட கண்டனம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக இந்த விவகாரத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருந்தார். இருப்பினும், இத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள தமிழ்நாடு போலீசார், மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மீது கற்கள், கொடிகளை வீசியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் ஆளுநர் ரவியின் கான்வாய் முற்றிலும் சென்ற பிறகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புக்கொடிகளை வீசி எறிந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி
இதற்கிடையே இது தொடர்பாக ஆளுநரின் மெய்க்காப்பாளர் தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதம் தொடர்பாகத் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ஆளுநரின் மயிலாடுதுறை பயணத்தில் என்ன நடந்தது என்பதை அவர் விளக்கி உள்ளார். ஆளுநரின் கான்வாய் காலை 9.30 மணியளவில் திருக்கடையூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கிப் புறப்பட்டது. ஆளுநரின் கார் நான் முன் பக்கம் அமர்ந்து இருந்தேன். ஆளுநர் பின்பக்கம் அமர்ந்து இருந்தார். பாதுகாப்பு வாகனங்களும் எங்களுடன் வந்தது.

என்ன நடந்தது
தாராபுரம் ஆதினத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆளுநரின் கார் சென்று கொண்டு இருந்த போது, காலை 9.50 மணியளவில் ஏவிசி கல்லூரி அருகே திரண்டு இருந்த சிலர் கருப்பு கொடிகளைக் காட்டி, கோஷங்களை எழுப்பி கொண்டு இருந்தனர். ஆளுநரின் கான்வாயை பார்த்ததும், ஆளுநரின் காரை மறிப்பதற்காக அவர்கள் போலீசாரை தள்ள முயன்றனர். அப்போது அவர்கள் கையில் இருந்த கொடிகளை கான்வாய் நோக்கித் தூக்கி வீசினர்.

பாதிப்பு இல்லை
இருப்பினும், நல்வாய்ப்பாக ஆளுநர் மற்றும் ஆளுநரின் கான்வாய் எவ்வித பாதிப்பும் இல்லாமல், அப்பகுதியைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுவிட்டது. ஆளுநரை அவரது பணி செய்ய விடாமல் தடுக்க அவர்கள் முயன்றனர். இது இந்தியத் தண்டனை சட்டம் 124கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும். எனவே. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications