அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா- தமிழ்நாட்டு மக்கள் தீபம் ஏற்றி கொண்டாட ஆளுநர் ரவி வேண்டுகோள்
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்கள் நாளை தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. அயோத்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதத் தலைவர்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளில் மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் நாளை விடுமுறை அறிவித்துள்ளன.
அத்துடன் அயோத்தி ராமர் கோவில் திறப்பு நாளில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என ஏற்கனவே பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நமது தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீ ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன். 'ஸ்ரீ ராமர்' பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீ ராமர் கோயிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications