ஆர்.என்.ரவியை காஷ்மீரில் சுற்றிவளைத்த எதிரிகள்.. காப்பாற்றியது பகவத் கீதையாம்! பிளாஷ்பேக் போன ஆளுநர்
சென்னை: ஜம்மு காஷ்மீரில் எதிரிகளால் தான் சூழப்பட்டபோது தன்னை பகவத் கீதையே காப்பாற்றி நல்ல நிலைக்கு கொண்டு வர உதவியது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். தன்னை நோக்கி விமர்சனங்கள் வரும்போதும் பகவத் கீதையே வலிமையை தந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் விஷ்வ விஷ்ணு சஹஸ்ரனமா சமஸ்தான் விஸ்வாஸ் நிறுவனம் மழலைகளுக்காக கோடைக்கால சிறப்பு ஆன்மீக இசை நிகழ்ச்சியை தொடங்கியது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், இசை கலைஞர்கள், ஆன்மீகவாதிகள் கலந்துகொண்டு இருக்கிறார். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், "மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டது பகவத் கீதை. அதை மனப்பாடம் செய்தால் சிறந்த மனிதராக உருவாக்கும். பகவத் கீதையை நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போதே முழுமையாக மனப்பாடம் செய்து உள்ளேன். ஆனால், பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் நான் இருந்து இருக்கிறேன்.
ஒருமுறை ஜம்மு காஷ்மீரில் என்னை எதிரிகள் சூழ்ந்துகொண்டனர். அப்போது பகவத் கீதையே என்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவி புரிந்தது. என்னை நோக்கி விமர்சனங்கள் வரும்போதும் அந்த நேரங்களில் பகவத் கீதை வலிமையை தந்து இருக்கிறது. ஒருபோது குறிக்கோளில் இருந்து விலகியது கிடையாது. குருக்கள், ஞானிகள் உட்பட யாராலும் பகவத் கீதையின் முழுமையான அர்த்தத்தை புரிந்துகொள்ள இயலாது." என்று தெரிவித்து உள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் ஆளுநர் ரவி பகவத் கீதை குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், "படிக்க, படிக்க பகவத் கீதையை கண்டு நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். பகவத் கீதையை படித்தால் தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும். கீதை படிக்கும் போது நல்லொழுக்கம் கட்டுப்பாட்டினை பெறலாம்.
மனப்பாடம் செய்ய எளிமையான வகையில் அழகாக பகவத் கீதையை இயற்றப்பட்டுள்ளது. எனது ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் என்னை ஊக்குவித்து நான் எதைப்பெற வேண்டும் என்று அறிய உதவியது பகவத் கீதை. இதன் மூலம் எந்த ஒரு செயலையும் நேர்கொண்ட பார்வையுடன் இலக்கை நோக்கி கொண்டு செல்லலாம்." என்றார்.












Click it and Unblock the Notifications