அரசு வேலைதான் கனவா? டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வர்களுக்கு பெரிய சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி பணிகளுக்காக நடத்தப்படும் ஐபிபிஎஸ், ரயில்வே பணிகளுக்கான ஆர்ஆர்பி ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்காக தமிழக அரசு கட்டணமில்லா பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. இந்த இலவச பயிற்சியில் சேர்ந்து படிப்பதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் பல லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள். மத்திய, மாநில அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்காக வருட கணக்கில் பலரும் படித்து வருவதை பார்க்க முடிகிறது. டிஎன்பிஎஸ்சி, ரயில்வே, எஸ்எஸ்சி போன்றவை நடத்தும் தேர்வு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்து உடனடியாக விண்ணப்பித்து இளைஞர்கள் நூலகங்களுக்கும் பயிற்சி மையங்களுக்கும் சென்றும் சேர்ந்து படிப்பதை காண முடிகிறது.

போட்டி தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பிலும் இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 6 மாதம் காலம் இந்த இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் சேர்ந்து படிக்க விரும்பும் தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் போட்டித்தேர்வுகள் மையம் கூறியிருப்பதாவது:-
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி பணிகளுக்காக நடத்தப்படும் ஐபிபிஎஸ், ரயில்வே பணிகளுக்கான ஆர்ஆர்பி ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் போட்டி தேர்வர்களுக்கு தமிழக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. அந்த வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 தேர்வர்களுக்கும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் 300 தேர்வர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும், தேர்வர்கள் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்புவர்கள் போட்டித்தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களை இந்த வெப்சைட் முகவரியில் தேர்வர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
எஸ்எஸ்எல்சி-யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டும் தேர்வர்களுக்கு அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் இந்த பயிற்சி மைய வகுப்புகள் முற்றிலும் இலவசம் என்பதால் போட்டி தேர்வர்கள் எந்த வித கட்டணமும் இன்றி பயிற்சியை பெற்று போட்டி தேர்வை தன்னம்பிக்கையுடன் அணுக முடியும். அரசுப்பணிகளுக்காக அடுத்தடுத்து போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அரசின் இந்த இலவச பயிற்சி மையம் தேர்வர்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். பயிற்சி மையங்களில் துறைசார்ந்த நிபுணர்கள் வந்து போட்டி தேர்வுகளுக்கு படிப்பது தொடர்பாக பயிற்சியை அளிப்பார்கள்.












Click it and Unblock the Notifications