"கொதிக்கும் ஏ.சி".. வெடுக்குனு அப்படி சொன்னாரே.. இப்ப வழியேயில்ல.. எடப்பாடிக்கு "ஹோப்" தந்த சண்முகம்
கடைசியாக வந்து தன்னுடைய ஆதரவை எடப்பாடிக்கு தெரிவித்துள்ளார் ஏசி சண்முகம்
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவு என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.. நேற்றைய தினம் பாஜக தன்னுடைய ஆதரவை அதிமுகவுக்கு தந்திருந்த நிலையில், ஏசி சண்முகமும் தன்னுடைய ஆதரவை அறிக்கை விட்டு தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, அதனை தமிழக பாஜக கண்டுகொள்ளவேயில்லை.. எனினும், தொகுதியை தமாகாவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கிவிடும்படி சொல்லியதுடன், பாஜகவின் தாமரை சின்னத்தில் யுவராஜா போட்டியிடட்டும் என்று பாஜக தரப்பு சொல்லியுள்ளது..
ஆனால், இதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளாமல், நேரடியாக வாசனிடமே பேசி அவர் வாயிலாகவே அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கவும் செய்துவிட்டாராம். இதுதான் தமிழக பாஜக சீனியர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எனவே தமிழக பாஜக போட்டியிட வேண்டும் என்று சீனியர்கள் சொல்லி உள்ளனர்.

முடங்கிடுமா
அதாவது, "இலை இல்லாவிட்டால் திமுகவுக்குதான் சாதகமாகிவிடும், அதனால் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும்.. நமக்கு ஓபிஎஸ், தினகரன், மட்டுமல்லாமல், ஏசி சண்முகம், பாரிவேந்தர் போன்றோரின் சப்போர்ட்கள் இருக்கின்றன, அதனால் நாம் இருக்கிறது. வேட்பாளரை அறிவிக்கலாம்" என்று தமிழக பாஜகவிடம், அக்கட்சியின் சீனியர்கள் வலியுறுத்தியதாகவும் செய்திகள் கசிந்தன. மற்றொருபக்கம், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு விடுமோ? சுயேட்சை சின்னம்தான் ஒதுக்கப்பட்டு விடுமோ? என்ற சந்தேகமும், குழப்பம் வலுத்தது..

சின்ன சின்ன கட்சி
இந்த சூழலில்தான், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை எடப்பாடி தரப்பு நேரடியாக சந்தித்து ஆதரவு கோரியது... ஆனால், அதை ஏசி சண்முகம் நிராகரித்துவிட்டார்.. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏசி சண்முகம், "பாஜக இருக்கும் பக்கம் நான் இருப்பேன்.. பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.. பாஜக பக்கம்தான் இருப்பேன்... இடைத்தேர்தல் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி நல்ல முடிவெடுக்கும் என்ற திட்டவட்டமாக அறிவித்தார்.. ஏசி சண்முகம் இப்படி கூறியிருந்தது அதிமுகவுக்கு ஏமாற்றத்துடன் அதிர்ச்சியையும் சேர்த்து தந்தது..

பெருத்த அதிர்ச்சி
அதிமுக முன்னணி நிர்வாகிகள் நேரில் ஆதரவு கேட்டும்கூட, கூட்டணியில் உள்ள சிறிய கட்சிளும் உதாசீனப்படுத்தி விட்டதே.. பாஜக எந்த முடிவும் எடுக்காத நிலையிலும் கூட பாஜகவுக்கே ஆதரவு என சிறிய கட்சிகள் அறிவித்ததால், எடப்பாடி டீம் பெருத்த அதிர்ச்சிக்கு ஆளானதாம். இதற்கு பிறகு, ஈரோட்டில் தேர்தல் பணிமனை திறப்பு விழா பேனரில், பாஜக தலைவர்களின் போட்டோக்கள், பெயர்களை எடப்பாடி தரப்பு புறக்கணித்திருந்ததுடன், பாஜக-வின் நிலைப்பாட்டைத்தான் ஆதரிப்போம் என்று சொன்ன ஜான்பாண்டியன், ஏ.சி சண்முகம் ஆகியோரின் போட்டோக்களும் தவிர்க்கப்பட்டது பலராலும் கவனிக்கப்பட்டன.

ஏசி சண்முகம்
இப்போது ஒருவழியாக இரட்டை இலை விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், நேற்றைய தினம், பாஜக, புதிய நீதிக்கட்சி போன்றோரது ஆதரவு இல்லாமலே ஈபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்தார். எனவே தமிழக பாஜகவும் தன்னுடைய ஆதரவை அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.. இந்நிலையில், வேறு வழியில்லாமல், கடைசியாக வந்து தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது புதிய நீதி கட்சி.. அக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகமும் அதிமுக வேட்பாளருக்கு தங்கள் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

லாஸ்ட் ஆதரவு
தேசிய ஜனநாயக கூட்டணியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தரும் அதிமுக வேட்பாளருக்கு புதிய நீதி கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் முழு ஆதரவைத் தந்து வேட்பாளரை மாபெரும் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஜிகே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில் கடைசியாக ஏ.சி.சண்முகமும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications