"தூண்டிலை" வடக்கே வீசிய ஸ்டாலின்.. "நாடெங்கும் எதிரொலிக்கிறது திமுகவின் சமூக நீதி குரல்": அட முதல்வர்
சமூக நீதிக்கான திமுகவின் குரல் இப்போது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது என்றார் ஸ்டாலின்
சென்னை: பாஜக அல்லாத அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்கள் வைத்து, அதற்கு இணையான ஆட்சியை நடத்த பாஜக முயற்சி செய்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.. இந்தியாவில் பாஜக உருவாக்கிய அரசியலமைப்பு குழப்பம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று கூறியுள்ள ஸ்டாலின், இதன்காரணமாகவே, சமூக நீதி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மைக்கான திமுகவின் குரல் இப்போது நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில் தமிழகமும் களத்தில் குதித்துள்ளது.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் விவகாரங்கள் போன்றவை குறித்த மறைமுகமான பேச்சுக்கள் அரசல்புரசலாக நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணி மட்டும்தான், இப்போதைக்கு உறுதியாகவும், வலுவாகவும் உள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை கூட்டணியே இந்த முறையும் தொடரும் என்றே நம்பப்பட்டு வருகிறது..

சண்முகம் டமார்
திடீரென பாஜக - திமுக கூட்டணி என்று சிவி கொளுத்திபோடவும், அந்த சலசலப்புக்கும் திமுக கூட்டணியே பதிலடி தந்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.. அதேபோல, காங்கிரஸ் தரப்பில் கூட்டணி மேலிடத்துடன் சில அதிருப்திகள் இருந்து வந்தநிலையில், அதையும் முதல்வர் ஸ்டாலின் நொறுக்கி தள்ளிவிட்டார்,.. கடந்த 2 நாட்களுக்குமுன்பு, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஸ்டாலின் தந்திருந்த பேட்டியானது, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.. காரணம், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குறித்தும், காங்கிரசுடன் திமுகவிற்கு இருக்கும் நட்பு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அதில் ஓபனாகவே கூறியிருந்தார்.. அத்துடன் ராகுலை மனதார புகழ்ந்து, பாஜகவை எதிர்க்க ராகுல் எந்த அளவுக்கு களமிறங்கி உள்ளார் என்பதையும் விலாவரியாக கூறியிருந்தார்.

சூப்பர் ராகுல்
இப்போது இன்னொரு பேட்டியையும் பிடிஐ-க்கு ஸ்டாலின் தந்துள்ளார். அதில், "தேசத்தின் கூட்டாட்சி கட்டமைப்பையும், மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லி எத்தனையோ பிரச்னைகளை நீங்கள் எழுப்பி வருகிறீர்கள்.. அதேபோல, இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து, பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு கடிதமும் எழுதியிருக்கிறீர்கள்.. அத்தகைய உங்கள் முயற்சிகளின் தாக்கம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்... வருங்காலத்தில், நீங்கள் ஒரு தேசிய தலைவராக வருவதற்கான வாய்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின் தந்த பதில்தான் இது:

கலைஞர்
"கலைஞர் ஒருமுறை சொன்னதையே, நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், "என் உயரத்தை நான் அறிவேன்".. அதுபோல, என்னுடைய பலம் என்ன? வரம்புகள் என்ன? என்று இரண்டுமே எனக்கு என்ன என்று தெரியும்.. தேசிய அளவில் சமூக நீதிக்கான முயற்சியை திமுக ஏற்கனவே எடுத்திருக்கிறது.. அதற்கான முயற்சிகளுக்கு பங்களித்தும் வருகிறது.. ஒன்றிய பாஜக அரசின் எத்தனையோ நடவடிக்கைகள், அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் வேறாக இருக்கின்றன.. மாநில அரசுகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை அவர்கள் பறிக்க நினைக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு அதிகாரப்பட்டியலில் உள்ள விஷயங்கள் எல்லாமே தங்களுக்கே சொந்தம் என்றும் நினைக்கிறார்கள்.

புலம்பறாரு
குறிப்பாக, பாஜக அல்லாத அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்கள் வைத்து, அதற்கு இணையான ஆட்சியை நடத்த பாஜக முயற்சி செய்கிறது.. திமுக மட்டுமல்ல, கேரளாவில் சிபிஐஎம், தெலங்கானாவில் பிஆர்எஸ், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி இப்படி பல கட்சிகள், ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி கொண்டிருக்கின்றன.. அவ்வளவு ஏன், பாஜவின் கூட்டணி கட்சியான புதுச்சேரி முதல்வரும், அங்குள்ள ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிராக தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.. இதற்கு காரணம், இந்தியாவில் பாஜக உருவாக்கிய அரசியலமைப்பு குழப்பம்தான்.. அதனாலேயே, சமூக நீதி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மைக்கான திமுகவின் குரல் இப்போது நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது" என்றார் ஸ்டாலின்.

தேசிய கவனம்
"பாஜக அல்லாத சில மாநிலங்களில், ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன... இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது அரசின் திறமையான செயல்பாட்டை பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? மாநிலத்தால் இயற்றப்பட்ட முக்கிய சட்டங்கள் ஆளுநரால் அனுமதிக்கப்படவில்லை என்கிறபோது, இப்போதுள்ள ஆளுநருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று மற்றொரு கேள்வி முதல்வர் ஸ்டாலினிடம் எழுப்பப்பட்டது.. அதற்கு அவர் தந்த பதில்தான் இது:

வித்தியாச வித்தியாசம்
"பொதுவாக, அரசியலமைப்பு சட்டத்தை படிக்கும் பழக்கமுள்ள ஆளுநர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் சுமுகமான உறவையே பேணுவார்கள். ஆனால், நியமன ஆளுநர்களின் நடத்தையும் அணுகுமுறையும் இங்கு வித்தியாசப்படுகிறது.. முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதுதான், நம்முடைய மொத்த அரசியலமைப்பையே கேலிக்கூத்தாக்குகிறது... இது தேர்தலில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களின் ஜனநாயக உரிமைகளை அவமதிப்பதற்கு சமமாகும்.. இது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை பிற மாநிலங்களுக்கு, தரம்தாழ்த்தி காட்டுவதற்கான முயற்சிகளில் ஒன்றாகும்..

படுமோசம்
மாநில சட்டப்பேரவைகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், ஒப்புதல் பெறாமல் முடக்கப்பட்டால், அவை அரசியல் சாசனத்தை செயலிழக்க செய்கின்றன என்றே பொருளாகும்.. மக்களின் விருப்பம் எந்தவிதத்திலும் மதிக்கப்படாத இந்த போக்கு, பிரிட்டிஷ் ஆட்சியை விட படுமோசமானது... ஆளுநர்கள் இப்படியான அரசியல் விளையாட்டுகளை விளையாடுவது, ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி இயல்புக்கும் நல்லதில்லை.. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும், சீர் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications