பறக்குது பலசரக்கு.. மிரட்டுது காய்கறிகள்.. விரட்டுது அரிசி விலை.. 20% உயர்ந்த அத்தியாவசிய பொருட்கள்
சென்னை: தமிழ்நாட்டில் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருப்பது, நடுத்தர வர்க்க மக்களை கவலைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது. இந்த விலைஉயர்வுக்கான சில காரணங்களை கடைக்காரர்கள் கவலையுடன் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகள் விலையோ அதற்கு மேல் உயர்ந்து கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டதால், நடுத்தர மக்கள் விழிபிதுங்கி போய் உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: அதனால்தான், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் விரிவான ஆலோசனையை மேற்கொண்டிருந்தார்..
"யாரெல்லாம் அத்தியாவசிய பொருட்களை பதுக்குகிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் கடுமையான நடவடிக்கை எடுங்கள்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்... இப்போதைக்கு 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது.. ஆனாலும் மற்ற காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விலையோ உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
என்ன காரணம்: இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டுவந்தாலும்கூட, மளிகை பொருட்கள் விலையை குறைக்க முடியவில்லை.. காரணம், வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறி-மளிகை பொருட்கள் போதிய வரத்து இல்லை என்கிறார்கள்.. காய்கறி, மளிகையின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமே இதுதான்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம் சொல்லும்போது, "பருப்பு வகைகள் வரத்து குறைந்து விட்டதால் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 1 கிலோ துவரம் பருப்பு ரூ.120-க்கு விற்ற நிலையில், இப்போது, ரூ.180-க்கு விற்கப்படுகிறது. சீரகம் 1 கிலோ ரூ.400-க்கு விற்றுவந்தது இப்போது டபுள் மடங்காக எகிறி ரூ.800-க்கு விற்கப்படுகிறது.
பாசிப்பருப்பு: இஞ்சி 1 கிலோ ரூ.150-க்கு விற்பனையானது, இப்போது ரூ.350-க்கு விற்கப்படுகிறது.. உளுந்து கிலோ ரூ.154-க்கு விற்கப்படுகிறது. மிளகு 1 கிலோ ரூ.550-ல் இருந்து ரூ.700-க்கு விலை உயர்ந்துள்ளது.. சோம்பு ரூ.500 ஆகவும், கடுகு ரூ.120 ஆகவும், வெந்தயம் ரூ.120 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. பூண்டு ரூ.150-ல் இருந்து ரூ.180-க்கும், பாசிப்பருப்பு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.154 ஆகவும், கடலை பருப்பு 1 கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.90-க்கும் விலை உயர்ந்துள்ளது.
அரிசி மட்டுமே கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.. குறிப்பாக, சிவாஜி பிராண்ட் பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ பாக்கெட் ரூ.1,600-க்கு விலை உயர்ந்துவிட்டது. பொன்னி பச்சரிசி 25 கிலோ ரூ.1,500-க்கு விற்கப்படுகிறது. கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.195-க்கு எகிறிவிட்டது.. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள் மட்டுமே போதாது. இன்னும் அதிகம் கவனம் செலுத்தினால்தான் அனைத்து பொருட்களின் விலையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்" என்கிறார் மாரித்தங்கம்

மத்திய அமைச்சர்: இதனிடையே, விலை உயர்வை தடுப்பது குறித்து அரசு பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக, அரிசி, கோதுமை, பருப்பு, தக்காளி போன்ற பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிரடி கோரிக்கை: அதுமட்டுமல்லாமல், உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் முதல்வர் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications