தவெக, அதிமுக எதிர்பார்ப்பு நிறைவேறுது.. ரோடு ஷோ, அரசியல் கூட்டம் நெறிமுறை.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தி, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூறியுள்ள ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி, சாலைப் பேரணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது. இதனிடையே சென்னை உயா்நீதிமன்றம், தமிழக அரசு 10 நாள்களில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பி்ல் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஒரே இடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் அனுமதி கேட்டால் யார் முதலில் அனுமதி கோரினார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ரோட் ஷோ நடத்துவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அல்லது உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோ ஆகியவற்றை மூன்று மணிநேரத்துக்குள் முடிக்க வேண்டும். கூட்டங்களில் இரண்டு மணிநேரத்துக்கு மேல் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
'தலா 4 லிட்டர் குடிநீர்... தற்காலிக கழிப்பறை' பங்கேற்பாளர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தாலுகா அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுவில் வருவாய், காவல்துறை, சுகாதாரம், பொதுப்பணி, மின்சாரம் மற்றும் தீயணைப்புத் துறைகளின் அதிகாரிகள் இருப்பார்கள்.
கூட்டத்துக்கு வரும் தொண்டர்களால் பொதுச்சொத்துக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை ஈடு செய்யும் வகையில் முன்வைப்புத் தொகையாக ஒரு லட்சம் முதல் 20 லட்சம் வரை செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அரசின் சார்பில் விதிக்கப்பட்டன. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன.
இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 28ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பளித்தனர். அரசியல் கட்சிகள் கூறியுள்ள ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபம் இருந்தால் கட்சிகள் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications