ஸ்டாலின் முதலமைச்சராகும் நாள் வெகு தொலைவில் இல்லை... குலாம் நபி ஆசாத் புகழாரம்..!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகும் நாள் வெகு தொலைவில் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் நடத்திய காணொலி கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அவரைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் ஸ்டாலினின் கடின உழைப்பு குறித்து விவரித்தனர்.

ஸ்டாலின் பற்றி புகழாரம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை கட்சியில் கடினமாக உழைத்து தலைவர் பதவி வரை வந்தவர் என்றும் அவரது பிறந்தநாளன்று அவரை வாழ்த்துவது தனக்கு மன மகிழ்ச்சியை தருகிறது எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை திமுக ஆட்சியில் கொண்டு வந்தவர் ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார்,

நம்பிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மிகப்பெரும் வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார் எனவும் குலாம் நபி ஆசாத் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

நோயற்ற வாழ்வு
தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நோயற்ற வாழ்வுடனும் வாழ வேண்டும் என அவரது பிறந்தநாளில் தாம் வாழ்த்துவதாகவும் தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசாங்கம் ஸ்டாலின் தலைமையில் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

நியாயமான
இதனிடையே அவரைத் தொடர்ந்து பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்டாலினை பொறுத்தவரை நியாயமான-நேர்மையான முறையில் அரசியல் செய்யக் கூடியவர் என்றும் அடக்குமுறைகளை கண்டு அஞ்சாமல் அரசியல் செய்யும் துணிச்சல்மிக்கவும் எனவும் புகழாரம் சூட்டினார். தொண்டர்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும் அற்புதமான தலைவர் ஸ்டாலின் என்றும் அவரது நிர்வாகத் திறமையை பொறுத்தவரை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications