குட்கா வழக்கு: மலேசியாவில் இருந்து சென்னை திரும்பும் விஜயபாஸ்கர் கைதாகிறாரா? அதிமுகவில் பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், சிபிஐயால் கைது செய்யப்படலாம் என்கிற பரபரப்பு அதிமுக வட்டாரங்களில் நிலவுகிறது. மலேசியாவில் இருந்து சென்னை திரும்பும் விஜயபாஸ்கரை விமான நிலையத்திலேயே சிபிஐ அதிகாரிகள் கைது செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
மாதவராவ் என்ற வியாபாரி ரூ215 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்தார் என 2016-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில்தான் தமிழகத்தையே அதிர வைத்த குட்கா விவகாரம் அம்பலமானது.

சிக்கிய மாதவராவ் டைரி
மாதவராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக அப்போதைய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் இடம்பெற்றிருந்ததையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குட்கா விற்பனைக்காக ரூ39.91 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மாதவராவ் அந்த டைரியில் குறித்து வைத்திருந்தார்.மாதராவ் டைரி அடிப்படையில் குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசின் இந்த கடிதம் 2017-ல் ஊடகங்களில் பகிரங்கமாக வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டசபையில் குட்கா விவகாரம்
ஆனால் அப்போதைய அதிமுக அரசு, இப்படி ஒரு கடிதமே வரவில்லை என கூறியது. அதேநேரத்தில் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சசிகலாவின் அறையில் இது தொடர்பான கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின என வருமான வரித்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அந்த கால கட்டத்தில் காவல்துறை தலைவராக இருந்த அசோக்குமாருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டதாகவும் ஒரு சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரத்தை அப்போது சட்டசபையில் திமுக எழுப்பியது. இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டசபையில் சட்டை கிழிக்கப்பட்ட சம்பவமும் அப்போது நிகழ்ந்தது.

முதல் குற்றப்பத்திரிகை- கைது
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த மறைந்த ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றமும் சிபிஐ விசாரிக்க அனுமதித்தது. இதனடிப்படையில் முதல் கட்டமாக 27 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மாதவராவ், காவல்துறை அதிகாரிகள் சிலர் என மொத்தம் 6 பேர் கைதும் செய்யப்பட்டனர்.

தமிழக அரசு அனுமதி
இதனைத் தொடர்ந்து குட்கா வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்த தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி கோரியது. இதற்கு தமிழக அரசும் அனுமதி அளித்தது. இதனால் மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் கைது?
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போது மலேசியா சென்றுள்ளார். அங்கிருந்து இன்று சென்னை திரும்புகிறார் விஜயபாஸ்கர். ஏற்கனவே முதல் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டது போல தற்போது சென்னை திரும்பும் விஜயபாஸ்கரும் விமான நிலையத்தில் வைத்தே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுவாரோ என்கிற பரபரப்பு அதிமுக வட்டாரங்களில் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications