இன்று இலங்கை.. நாளை தமிழகம்.. எதற்கு எதனுடன் கோர்த்து விடுகிறார் பாருங்க எச் ராஜா!
சென்னை: தமிழகத்தில் வாரிசு அரசியல் தொடர்ந்தால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இலங்கையின் நிலை தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் என்பது பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. அதிலும் தமிழகத்தில் திமுகவின் வாரிசு அரசியலை பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜக தலைவர் ஜேபி நட்டா வரை விமர்சித்து வருகிறார்கள்.
அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுகவில் அவர் மறைவுக்கு பிறகு, கருணாநிதி தலைவரானார். பிறகு அவரது மகன் ஸ்டாலின கட்சி பணிகளில் ஈடுபட்டார். எம்எல்ஏ, அமைச்சர், மேயர், துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். தற்போது முதல்வராக உள்ளார்.

கருணாநிதியின் மூத்த மகன்
அது போல் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரியும் மத்திய அமைச்சராக இருந்தவர். கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை எம்பியாக இருந்தார். தற்போது மக்களவை எம்பி பதவிகளில் உள்ளார். இவர்கள் மட்டுமல்லாமல் கருணாநிதியின் மூத்த சகோதரியின் மகன் தயாநிதி மாறன் எம்பியாக உள்ளார். திமுகவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரை சுற்றியே கட்சியின் முக்கிய பதவிகள் சுற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களும் கட்சி நிர்வாகத்தில் முதல்வருக்கு பக்கபலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கருணாநிதி குடும்பத்தினர்
கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மூத்த தலைவர்களின் வாரிசுகளும் முக்கிய பதவிகளில் வகிக்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். அது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலினின மகன் எம்எல்ஏவாக உள்ளார். அவர் விரைவில் அமைச்சரவையிலும் இடம்பெறுவார் என்று ஹேசியங்கள் அவ்வப்போது எழுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் திமுகவின் வாரிசு அரசியலை மறைமுகமாகவும் நேரடியாகவும் அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார்கள். "எல்லா கட்சியிலும் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என திமுக வாதம் வைக்கிறது. ஆனால் வாஸ்தவம்தான் எல்லா கட்சிகளிலும் வாரிசுகளுக்கு முன்னுரிமை என்பது குறிப்பாக அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம்பெறுகிறார்கள். ஆனால் திமுகவில் அப்படியில்லையே என்கிற எதிர்வாதமும் வருகிறது.

பாஜக தலைவர் எச் ராஜா
இந்த நிலையில் எல்லாவற்றுக்கு முத்தாய்ப்பாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரு படங்களை சேர்த்து வெளியிட்டுள்ளார். அதாவது ஒரு பக்கம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது மகன் நமலுக்கு (அமைச்சராக இருந்து இலங்கை நெருக்கடியால் பதவி விலகியவர்) பொன்னாடை போர்த்தும் காட்சி, மறுபுறம் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தும் காட்சி உள்ளது. இலங்கையில் ரூ 6 லட்சம் கோடி கடன் தமிழகத்தில் 6.5 லட்சம் கோடி கடன் என்று அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.

எச் ராஜா வெளியிட்ட ட்வீட்
எச்.ராஜா இந்த படத்துடன் நின்றுவிடவில்லை. அதில் இன்று இலங்கை, நாளை தமிழகம் என குறிப்பிட்டுள்ளார். அதாவது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இன்று வெளிநாடுகளில் கையேந்தும் நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது. அங்கு அன்னிய செலாவணி பாதிக்கப்பட்டதால் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

இன்று இலங்கை
அது போல் 6.5 லட்சம் கோடி ரூபாய் வைத்துள்ள தமிழகத்திலும் இலங்கையை போன்ற நிலை ஏற்படும் என தெரிவித்துள்ள எச் ராஜா, இலங்கையில் பிரதமர், அதிபரை தவிர மற்ற அமைச்சர்கள் பதவி விலக காரணம் பொருளாதார நெருக்கடி என சொல்லப்பட்டாலும் வாரிசான நமலுக்கு பதவி கொடுத்ததால், நிலைமையை சீர் செய்ய வேண்டிய மற்ற அமைச்சர்கள் அதிருப்தியடைந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள் என சொல்லப்படுகிறது.

நாளை தமிழகம்
இதே போன்று தமிழகத்தில் நாளை நெருக்கடி ஏற்பட்டால், மகன் உதயநிதி கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் நாளை அரசியல் ஸ்திரதன்மை இல்லாமல் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச் ராஜா மறைமுகமாக சொல்லியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு வாரிசு அரசியலை கோர்த்து விடுவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஏனெனில் மதவாதம்தான் இலங்கை நெருக்கடிக்கு காரணம் என்றும், சீன சதியும் காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் ராஜா ஏன் இப்படி கூறினார் என்று திமுகவினர் அந்த பதிவை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications