“பின்விளைவுகள்”.. ஸ்டாலினுக்கே எச்.ராஜா மறைமுக மிரட்டல்! சிஏஏ -வை எதிர்த்தால் அரசு கலைக்கப்படுமா?
சென்னை: குடியுரிமை திருத்தச்சட்டத்தை மாநில அரசு அமல்படுத்தாவிட்டால் அதன் விளைவு என்ன என்று முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தெரியும் என பாஜகவை சேர்ந்த எச்.ராஜா மறைமுக எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், சமணர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் என 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்தால் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து சிஏஏ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வர இருந்ததாக கூறப்பட்ட நிலையில், குடியுரிமை பெற தகுதியுடைய மதங்களில் இஸ்லாம் இல்லாதது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எழுப்பப்படும் கேள்விகள் மாற்றப்பட்டு, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் முஸ்லிம்கள் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்று கூறி பல்வேறு தரப்பினர் இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டம் காரணமாகவும், அதன் தொடர்ச்சியாக வந்த கொரோனா பெருந்தொற்றாலும் இந்த சட்டம் அமலாகவில்லை. இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், “இந்தியாவில் 7 நாட்களுக்குள் சிஏஏ அமல்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன். இது மத்திய அரசின் விவகாரம். தனியாக இதை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த அவசியம் இல்லை. முதலமைச்சரிடமும் இது பற்றி பேச வேண்டியது கிடையாது.” என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம்.
2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே CAA வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்! #NoCAAInTamilNadu.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, “பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை சட்டத்தை மாநில அரசு செயல் படுத்தாவிட்டால் மாநில அரசு அரசியல் சட்டப்படி செயல்படவில்லை என்று பொருள். இதன் விளைவு என்ன என்பது முதல்வருக்கு தெரியும். வீண் விஷப்பரிட்சை வேண்டாம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications