தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்-ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு
சென்னை: சர்ச்சைக்குரிய சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறி செல்போன் கடைகளை திறந்து வைத்தனர் என்ற புகாரின் பேரில் கடந்த 19-ந் தேதி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சித்ரவதை தாக்குதலில் மரணம்
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் சாத்தான்குளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதுதான் கைது செய்யப்பட்ட ஜெயராஜூம், பென்னிக்ஸூம் காவல்நிலையத்தில் வைத்து போலீசாரால் கொடூரமாக சித்திரவதை செய்து தாக்கப்பட்டது தெரியவந்தது.

தாமாக முன்வந்து விசாரணை
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கி சாட்சிகள், கோவில்பட்டி சிறையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சாத்தான்குளத்தில் விசாரணை
இதையடுத்து மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இருவரும் விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜ்திரேட்டின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீசார் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆட்சியர் கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்
இதனால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு வருவாய்த்துறை அதிகாரியை பொறுப்பாக நியமிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications