சொத்து வரி உயர்வு.. திமுக கூட்டணி போராட்டத்துக்கு ஹைகோர்ட் தடை!
சென்னை: கோவையில் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் செப்டம்பர் 27ம் தேதி நடத்த உள்ள முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில், பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்ற வகையில் உயர்த்திய 100 சதவீத சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த "சூயஸ்" என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 27ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சொத்து வரி உயர்வை சென்னை உயர் நீதிமன்றமும், மதுரைக் கிளையும் உறுதி செய்துள்ளதாகவும், வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேசமயம், போராட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், கோவையில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications