நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்.. தலைமை நீதிபதி காட்டம்.. பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை: நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் குறித்த புத்தகத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பொறுப்பில் இருக்கும் நீதிபதி குறித்து இப்படி பேச எப்படி அனுமதிக்க முடியும்? - என காட்டமாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, புத்தகத்தை வெளியிட இருந்த கீழைக்காற்று பதிப்பகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பற்றிய புத்தகத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளதாக கீழைக்காற்று பதிப்பகம் தெரிவித்து இருந்தது.

இந்த புத்தகத்தின் தலைப்பே நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இது தொடர்பான விளம்பர அட்டை படங்களும் வெளியாகி இருந்தது. மேலும் சென்னை புத்தகக் காட்சியில் இந்த புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இப்புத்தகம் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும், நீதித்துறையின் நேர்மையையே கேள்விகுறியாக்கும் வகையிலும் கேலி செய்யும் வகையிலும் இருப்பதாக வழக்கறிஞர் பி ஜெகநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
திருப்பரங்குன்றம் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தொடர்பான புத்தகத்தை வெளியிட தடை கோரி வழக்கறிஞர் பி ஜெகநாத் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, "பொறுப்பில் இருக்கும் நீதிபதி குறித்து இப்படி பேச எப்படி அனுமதிக்க முடியும்." என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் குறித்த புத்தகத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் கூறிய நீதிபதி, அறிவுசார் புத்தக கண்காட்சியில் இதுபோன்ற புத்தகங்களை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் குறித்த புத்தகத்தை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. புத்தகத்தை வெளியிட இருந்த கீழைக்காற்று பதிப்பகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுகிறேன். நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பற்றிய புத்தகத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்படுகிறது. காவல்துறையினர் இந்த புத்தகம் விற்பனை செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications