தப்புவாரா அமைச்சர் தங்கம் தென்னரசு.. இன்று உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.
சொத்து குவிப்பு வழக்குகளில் தமிழ்நாட்டின் முன்னாள் இந்நாள் அமைச்சா்கள் கீழமை நீதிமன்றங்களில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாா்.

இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் வளா்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் இறுதி விசாரணை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்து இருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சா் வளா்மதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளதை அடுத்து, அந்த விசாரணையை செப்டம்பா் மாதம் நீதிபதி ஒத்திவைத்து உள்ளார்.
அதேபோன்று அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வா் பன்னீா்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிகள் ஆஜராக உள்ளதாகவும், இதன் காரணமாக வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்து இருந்தார். பிப்ரவரி 28 ஆம் தேதி, பிப்ரவரி 29 ஆம் தேதி மற்றும் மாா்ச் 5 ஆகிய தேதிகளில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தாா்.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மாா்ச் 5 ஆம் தேதி மற்றும் மார்ச் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், அமைச்சா் கே.கே. எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மீதான வழக்கு விசாரணை மாா்ச் 7 ஆம் தேதி மற்றும் மார்ச் 8 ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தாா். நிா்ணயிக்கப்பட்டு இருக்கும் இந்த நாட்களில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என அனைத்து தரப்பு வழக்கறிஞகளையும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞா், வரும் மாா்ச் 8 ஆம் தேதி வாதங்களை தொடங்கலாம் என்றும், மார்ச் 11 ஆம் தேதி நிறைவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு 2006 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்து 443 மதிப்பில் சொத்துக்களை குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மனைவி மணிமேகலை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க தங்கம் தென்னரசு தரப்பு மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தங்கம் தென்னரசு அவரது மனைவியை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்த உத்தரவை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications