எச். ராஜாவை காணோம்.. வீடு பூட்டிக் கிடக்காம்.. கோர்ட் நோட்டீஸ் ரிட்டர்ன் ஆயிருச்சு!
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் வீடு பூட்டிக் கிடப்பதால் அவரது வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நோட்டீஸ் ரிட்டர்ன் ஆகி விட்டதாம்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் விழாவின்போது காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச். ராஜா. அப்போது காவல்துறையையும், கோர்ட்டையும் மிகக் கேவலமாக காரித் துப்பிப் பேசினார். குறிப்பாக ஹைகோர்ட்டை அவர் பேசிய வார்த்தையைப் பார்த்தும், கேட்டும் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்து போனது.
இந்த பேச்சு தொடர்பாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் நேரில் ஆஜராகுமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சென்னை வடபழனியில் உள்ள எச். ராஜா வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.. ஆனால் அந்த வீடு பூட்டிக் கிடப்பதால் நோட்டீஸ் ஹைகோர்ட்டுக்கே திரும்பி வந்து விட்டதாக ஹைகோர்ட் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
எச். ராஜா சென்னையில் எங்கு தங்கியிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.