“சனாதன சர்ச்சை”.. உதயநிதி பற்றி அவதூறு! ஆங்கில டிவி ஆசிரியர் போலீஸ் முன் ஆஜராகனும் - ஐகோர்ட் ஆர்டர்
சென்னை: சனாதன தர்மத்துக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாக ஆங்கில தொலைக்காட்சி ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் ஆலோசனை ஆசிரியர் அபிஜித் மஜூம்தார் கட்டுரை எழுதியிருந்தார். அதில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்ததாகக் கூறி, அபிஜித் மஜூம்தார் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அபிஜித் மஜூம்தார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆஜராகி, வழக்குப் பதிவு செய்தது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது எனவும் முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட வழங்கப்படவில்லை என கூறினார்.
காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, மனுதாரரை கைது செய்யும் நோக்கம் தற்போது இல்லை எனவும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் மட்டும் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து, நவம்பர் 8 ஆம் தேதி சென்னை சைபர் க்ரைம் போலீசார் முன்பு ஆஜராகும்படி அபிஜித் மஜூம்தாருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், மனு மீதான விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
சனாதன சர்ச்சை: கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அமைச்சர் "சனாதனம் என்பது கொசு, டெங்கு, ஃப்ளூ, மலேரியா போன்ற நோய்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாக கூறி அவருக்கு இந்துத்துவாவினர், பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள், வலதுசாரிகள் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டங்களும், ஊர்வலங்களும் வட மாநிலங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications