கோமுட்டி குளம் இருந்துச்சா இல்லையா.. இருந்துச்சுன்னா இப்ப எங்கே காணோம்.. ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி!
சென்னை: வடிவேலு பட காமெடி பாணியில் குளத்தைக் காணோம் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த கோமுட்டிகுளம் என்ற குளத்தை கட்டிட கழிவுகளை போட்டு, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜதுரை நிரப்பி, குளத்தை மாயமாக்கி விட்டதாகக் கூறி, வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாகவும், குளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றும், குளத்தை மூடிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர், அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு புகார் மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, குளம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர்.
'ஏ' ரிஜிஸ்டரில் சம்பந்தப்பட்ட சர்வே எண்ணில், மாரியம்மன் கோவில் உள்ளது என்றும், குளம் இல்லை என்றும், ஆரம்ப சுகாதார மையம் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், கிராம வரைபடத்தில் அங்கு குளம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாறுபட்ட தகவல்களுடன் பதில் மனுக்களை தாக்கல் செய்த அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த திருத்தத்தை யார் செய்தது? 'ஏ' ரிஜிஸ்டரில் மாற்றப்பட்டதா? இல்லை வரைபடத்தில் மாற்றப்பட்டதா?' என்று நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர்.
இதையடுத்து, கோமுட்டி குளம் இருந்ததா? இல்லையா? என்பதற்கு அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்டோபர் 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications