பாலில் கலப்படம்.. இதுவரை ஏன் நடவடிக்கை இல்லை.. விளாசிய ஹைகோர்ட்
சென்னை: கலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்ற ஆண்டு, தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், கலப்பட பாலை விற்பனை செய்வதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தார். இதையடுத்து அமைச்சருக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து வழக்கு தொடர்ந்தன.
இதனிடையே, வக்கீல் சூரியபிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், 'தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்து விற்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சொல்வதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் கேட்டு கொண்டிருந்தார்.
நேரில் ஆஜர்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக பொது சுகாதார துறை இயக்குனர் நேரில் ஆஜராகி, இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
23 பேர் மீது வழக்கு
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுசுகாதாரத்துறை இயக்குனர் நேரில் ஆஜரானார். அப்போது, பால் கலப்படம் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
வழக்குகள் எத்தனை?
ஆனால் இந்த அறிக்கை, நீதிபதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. அறிக்கையில் உள்ள விவரங்கள் அரைகுறையாக உள்ளதாக கூறியதுடன், இதுவரை பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் அபராதம் மட்டும் விதித்துள்ளீர்கள்? பாலில் கலப்படம் செய்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன?
அறிக்கை தாக்கல்
அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? ஒருவேளை வழக்குகள் முடிந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்த தண்டனைகள் என்னென்ன? என்று கேள்விகளை எழுப்பி, இது சம்பந்தமாக வரும் 21-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கண்டிப்புடன் உத்தரவு
இறுதியாக, கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலப்படத்தை ஒருபோதும் தடுக்கவே முடியாது என்றும், குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் தெரிவித்தனர்.