கருப்பு கவுனி முதல் குள்ளக்கார் வரை.. பிரதமருக்கு முதல்வர் கொடுத்த பரிசு.. என்னென்ன நன்மைகள்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கிய அரிசிகளின் பயன்கள் என்னென்ன என தெரியுமா?
Recommended Video
தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி பணம், நீட் விலக்கு மசோதா, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத பல சட்ட மசோதாக்கள் உள்ளிட்டவை குறித்து கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார்.
அவர் நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களுக்கு வாழ்த்துகளையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.
அது என்ன 9 வகை தானியங்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசின் முக்கியத்துவம் இதுதான்
பிரதமர் நரேந்திர மோடி
இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை ஸ்டாலின் சந்தித்து பேசினார். வழக்கமாக புத்தகங்களை பரிசாக அளிக்கும் வழக்கம் கொண்ட முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு விதவிதமான அரிசி பெட்டகத்தை பரிசாக கொடுத்தார்.
பாரம்பரிய அரிசி
இவை அனைத்துமே தமிழகத்தின் பாரம்பரிய அரிசிகளாகும். மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்கார், சீரகசம்பா, குடவாழை ஆகிய பாரம்பரிய அரிசிகளையும் கேழ்வரகு, கம்பு, சாமை, திணை, வரகு ஆகிய சிறுதானியங்களையும் அளித்திருந்தார். அந்த பெட்டகத்தின் மேலே கோல்டன் கிரைன்ஸ் ஆப் தமிழ்நாடு என்று ஆங்கிலத்திலும் தமிழ்நாட்டின் தானியங்கள் என தமிழிலும் எழுதப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை அரிசி
இந்த அரிசிகளின் பயன்களை அறிவோம். மாப்பிள்ளை சம்பா அரிசியானது 1940 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் மாப்பிள்ளை இளவட்டக்கல்லை தூக்கினால் மட்டுமே பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது. எனவே திருமணத்திற்கு முன்பு ஆண்மகனின் உடல் வலிமையை கொடுக்க இந்த அரிசியில் உருவாக்கப்பட்ட பலகாரங்களை மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. இது சம்பா பருவத்தில் பயிரிடப்படுவதால் மாப்பிள்ளை சம்பா என அழைக்கப்படுகிறது.
கருப்பு கவுனி
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. அதிக புரதமும் இதில் உள்ளது. உடலின் தசைகளை உருவாக்குவதற்கும் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஆந்தோசயனை் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இதில் உள்ளது. இது இதய நோயை தடுத்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது. கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை இந்த அரிசி அகற்றுகிறது. உடல் எடையையும் குறைக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
குள்ளக்கார்
குள்ளக்கார் எனும் அரிசி ரகத்தில் துத்தநாகம், இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளது. கெட்ட கொழுப்பை கரைக்கிறது. செரிமானம் மெதுவாக நடப்பதால் பசி எடுப்பது தாமதமாகும். உடல் எடையை குறைக்க நினைப்போர் இந்த நெல்லின் அரிசியை சமைத்து சாப்பிட்டால் வயிறு நிறைந்து உணவை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வார்கள். இது நரம்புக்கு வலு சேர்க்கும். உடலுக்கு வலிமையையும் தரும், குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
சீரக சம்பா
சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்யப்படுகிறது. இது உணவிற்கு நறுமணத்தை தருகிறது, அறுசுவையையும் தருகிறது. இது எளிதில் ஜீரணமாகிறது. வாத நோய்களை போக்கும். இந்த அரிசியில் கொழுப்பு சத்து இல்லை, இதை உண்பதால் உடல் பருமனை அதிகரிக்காது. நிறைய நார்ச்சத்துகள், புரோட்டீன்கள் உள்ளது. சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளது. குடல், சிறு குடல், மார்பகம், நுரையீரல் புற்றுநோயிலிருந்து காக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
கேழ்வரகு
கேழ்வரகில் கால்சியம் சத்து உள்ளது. எலும்பு, பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு புரை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கோதுமையை காட்டிலும் சிறந்த மருத்துவ பயனை தருகிறது. நீண்ட நேரம் பசி எடுக்காது. சரும பாதுகாப்பிற்கு நல்லது. விட்டமின் டி அதிகம் காணப்படுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மையால் அவதிப்படுவோர் இந்த அரிசியை எடுத்துக் கொள்ளலாம்.
வரகு, திணை, சாமை, கம்பு
வரகு, திணை, சாமை, கம்பு ஆகிய சிறுதானியங்களில் நார்ச்சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. பசியை நீண்ட நேரம் தாங்கும் தன்மை கொண்டது. உடல் பருமன், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். இவற்றில் பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் காணப்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகளை வரகு அரிசி சீர் செய்கிறது. அது போல் உடல் உஷ்ணத்தை குறைத்து சோர்வை நீக்குகின்றன. ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது. இத்தகைய மருத்துவக் குணங்களை கொண்ட பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களின் பயன்பாடு தற்போது மெல்ல மெல்ல மக்களிடையே அதிகரித்து வருகிறது.