"நம்பர் 1".. புருவம் உயர்த்தும் தேசம்.. தமிழகத்தின் "முதல் அரசு கருத்தரிப்பு மையம்".. திமுக அரசு செம
சென்னை: இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவாக அறிவித்திருக்கிறார்.
பொதுவாக, கருத்தரித்தலுக்கு தடையாக எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.. முக்கியமாக, உடல் பருமன்.. இதனால், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) என்ற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனைக்கு ஆளாகிவிடுவதால், அது கர்ப்பம் தரிப்பது வரை தடையாகி விடுகிறது.

குழந்தையின்மை: கருப்பை அகப்படல பாதிப்புகளாலும், கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, பல பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.. காலம் தாழ்த்தி திருமணம் முதல் கருப்பையில் தொற்று பாதிப்பு வரை, இன்னும் எத்தனையோ வித காரணங்களால் செயற்கை கருத்தரிப்புகள் பெருகி கொண்டிருக்கின்றன..
காணாமல்போன நம் பாரம்பரிய உணவுப்பழக்கம், மதுப்பழக்கம், சிகரெட், இதுபோன்ற காரணங்களும், ஆண்களுக்கு பெரும்பிரச்சனையாகி விடுகிறது. ஆக, கருத்தரிப்பதில் இரு தரப்பினருக்குமே சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
செயற்கை கருத்தரிப்பு: மாறி வரும் நவீன உலகில், இத்தகைய செயற்கைக் கருத்தரிப்புகளும் அதிகரித்து கொண்டே போகின்றன.. இயற்கையாக கருத்தரிப்பது குறைந்து கொண்ட போவதுடன், கல்யாணமான ஒரு வருஷத்துக்குள்ளேயே, எப்படியாவது கருத்தரித்து விட வேண்டும் என்ற அவசரமும்தான், இந்த செயற்கை கருத்தரிப்புகளுக்கு மூலகாரணமாகும். இதுபோன்றவர்களை குறிவைத்தே, செயற்கைக் கருத்தரிப்பு மையங்களும் புற்றீசல்போல பெருகி கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.
கல்யாணமாகி பல வருடம் குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, இந்த செயற்கை கருத்தரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம்தான் என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம், இதனால் கருத்தரிப்பு மையங்கள் நல்ல காசு பார்க்கவும் துவங்கிவிட்டன.
மோசடிகள்: சில செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் மோசடிகள் கூட நடந்திருக்கின்றன.. இதுபற்றின செய்திகளும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான், செயற்கை கருத்தரிப்பு மையங்களை, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வெடிக்க துவங்கி உள்ளன.. மற்றொருபக்கம், செயற்கையாகவே பெண்ணின் உடலில் கருமுட்டைகளை செலுத்தி ஆரோக்கியமான முறையிலேயே குழந்தையை பெற வைக்கும் இந்த முறைக்கு, ஏராளமாக செலவாகிறது..
கருமுட்டையை பெண்ணின் உடலில் செலுத்துவது உட்பட பல்வேறு மருத்துவத்தை கையாள வேண்டி உள்ளது.. எனவே, வசதிபடைத்தவர்களால் மட்டுமே செயற்கையாக கருத்தரிக்க முடியும் என்கிற நிலைமை இங்கு உருவாகிவிட்டது..

கருமுட்டை: தமிழகத்தில் 38 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 40-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை. இதனாலேயே குழந்தை இல்லாத தம்பதியினர் தனியார் கருத்தரித்தல் மையங்களை நாடுகின்றனர்.. இதனால் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர்.
இதனால் அரசு மருத்துமனைகளில் ஐவிஎப்., விந்தணு ஊசி, கரு வங்கி, கருமுட்டை மற்றும் விந்தணு வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தும் வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக அரசு மிகச்சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்தரிப்பு மையம்: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கூடிய விரைவில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதாவது, சென்னை எழும்பூர் மற்றும் மதுரையில் கிட்டத்தட்ட ரூபாய் 5 கோடி மதிப்பில் வரும் செப்டம்பர் மாதத்தில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட இருப்பதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் சொல்லும்போது, "ஃபெர்டிலிட்டி சென்டர் கருத்தரிப்பு மையங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக தனியார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசின் சார்பிலும் கருத்தரிப்பு மையம் அமைய வேண்டும் என்ற நிலையில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் எழும்பூரிலும், மதுரையிலும் இரண்டு கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட அந்த 2 மருத்துவ கருத்தரிப்பு மையங்களும் இன்றைக்கு கட்டுமான பணிகள் நிறைவுற்று அதற்கான பரிசோதனை ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
2 இடங்கள்: சென்னையில் அரசாணை வெளியிட்டு திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் மதுரையிலும் வெகு விரைவில் பரிசோதனை தொடங்கி மிக விரைவில் அந்த கருத்தரிப்பு மையங்கள் இரண்டுமே தொடங்கப்பட உள்ளன... நாட்டிலேயே அரசின் சார்பில் கருத்தரிப்பு மையங்கள் கட்ட எடுக்கப்படுகிற நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும்.. இந்த பணிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்படும்" என்றார் மா.சுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications