ரூ350 காது கேட்கும் கருவியை ரூ10,000 என தெரிவித்த சர்ச்சை..ஒப்புக் கொண்ட அண்ணாமலை தந்த புது விளக்கம்
சென்னை: ரஃபேல் வாட்ச் விவகாரத்தைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட காது கேட்கும் கருவி விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கி உள்ளார். வெறும் ரூ350க்கு கிடைக்கக் கூடிய காது கேட்கும் கருவிகளை ரூ10,000 என மதிப்பிலானது அளந்துவிட்டது அம்பலமானது. இதனையடுத்து இந்த தவறு நடந்துவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்புக் கொண்டிருக்கிறார். அத்துடன் ரூ350 மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் பெற்றவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
போர் விமானங்களின் உதிரி பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ரஃபேல் வாட்ச் கட்டியிருக்கிறேன்; என் தேசபக்தியின் வெளிப்பாடு இது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன விவகாரம் இப்போதும் ஓயவில்லை. ரஃபேல் கடிகாரத்தை வாங்கியதற்காக பில்லை கேட்கிறார் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. திமுகவினரும் ரஃபேல் வாட்ச் தொடர்பான பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

திமுகவினரின் இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத அண்ணாமலை, நான் பாதயாத்திரை போகும் நாளில் ரசீது தருவேன்; அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவேன் என கூறிவருகிறார். தேர்தலில் போட்டியிடுவோர் சொத்து விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அண்ணாமலையின் இந்த அறிவிப்பும் விவாதப் பொருளானது.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காது கேட்கும் கருவிகள் வழங்கினார் அண்ணாமலை. அந்த கருவிகள் ரூ10,000 மதிப்பிலானவை என தெரிவிக்கப்பட்டன. ஆனால் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெறும் ரூ350 மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் ரூ10,000-க்கு கொடுக்கப்பட்டதாக பொய் கூறப்பட்டதாக செய்திகள் பகிரப்பட்டன.

இதனையடுத்து தமது தவறை அண்ணாமலை ஒப்புக் கொண்டு பதிவிட்டுள்ளார். அதில், சுந்தராபுரத்தில் 100 நபர்களுக்கு செயற்கை கால், காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்துடன் இணைந்து @BJP4TamilNadu வழங்கியது. அரிமா சங்கத்தின் சார்பாக, தேசிய இயக்குனர் திரு மதனகோபால் அவர்களும் மாவட்ட ஆளுநர் திரு ராம்குமார் அவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். செயற்கை கால்களை @BJP4TamilNadu கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியது; காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்தினர் வழங்கினர். அரிமா சங்கம் காது கேட்கும் கருவி 10000 ரூபாய் மதிப்பிலானது என்று அதன் இயக்குனர் தெரிவித்ததன் அடிப்படையில் தான் பொருளின் விலை மேடையில் அறிவிக்கப்பட்டது.
350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவியை 10,000 ரூபாய் கருவி என்று தெரிவித்ததாக வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் நாம் விசாரித்ததில், கொடுக்கப்பட்ட காது கேட்கும் கருவிகள் 350 ரூபாய் தான் என்ற உண்மை தெரியவந்தது. அடுத்த 72 மணி நேரத்திற்குள், 16 குழந்தைகள் உட்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை @BJP4TamilNadu வழங்கும். அது மட்டுமல்ல, 16 குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 5000 ரூபாய் முதலீடாக
@BJP4TamilNadu செய்யும். இன்று 4 குழந்தைகளின் பெயரில் செல்வமகள்/PPF கணக்குகள் தொடங்கப்பட்டு அவரவர் பெற்றோர்களின் கையில் ரசீதுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 12 குழந்தைகளுக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் கணக்குகள் துவங்கப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications