இன்னும் முடியல.. அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் வெளுக்கப்போகும் மழை.. எங்கெல்லாம்?
சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று காலை 4 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. தரமணி, ஆலந்தூரில் 14 செ.மீட்டர் மழையும், செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேற்கு தாம்பரம், ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, குன்றத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 73 ஆண்டுகளில் இந்த மழைப்பதிவு 2-வது அதிகபட்சமாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications