கொங்கு மண்டலமே குளிரப் போகுது.. அடுத்த 3 நாட்களுக்கு தட்டி எடுக்கப் போகும் மழை
கோவை: கோவை, நீலகிரி பகுதிகளில் இன்று ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.

இன்று கனமழை
திருப்பத்தூர், மதுரை, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்றும் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மேற்சொன்ன இந்த மாவட்டங்களுடன் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் 91 மி.மீ மழை பெய்துள்ளது. இன்றும் கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் மழையின் தாக்கம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தென் மாவட்டங்களான மதுரை, விருதநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதேபோல கொங்கு மண்டலமான கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
10 நாட்களுக்கு
இந்த நிலை வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி வரை தொடரும். என்று கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த 10 நாட்களுக்கு கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளி ஆங்காங்கே மழை பெய்யும். மக்கள் தங்களின் பணிகளை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.'












Click it and Unblock the Notifications