அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் கன மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Recommended Video
சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்:
தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று துவங்கியுள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மழை பொழிவு ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 6 சென்டி மீட்டர் மழையும், தர்மபுரி, மதுரை மாவட்டங்களில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தளவில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட மூன்றிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும்.
திருத்தணியில் 42 டிகிரி செல்சியஸ், வேலூரிலும், மதுரையிலும் 41 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.