பல இடங்களில் வடியாத வெள்ளம்.. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்.. சென்னையில் தற்போதைய நிலை என்ன?
சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு குடியிருப்புகளில் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இன்னும் பல இடங்களில் நீர் வடியாத காரணத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து மிதமானது முதல் கனமானது வரையிலான மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சென்னையில் 207 மிமீ மழை பெய்தது. அதன்பின் திங்கள், செவ்வாயில் வேகம் குறைந்த மழை மீண்டும் நேற்று தீவிரம் அடைந்தது.
நேற்று மதியம் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தீவிரமாக பெய்தது. அதன்பின் கொஞ்சம் விட்ட மழை மீண்டும் தீவிரமாக பெய்ய தொடங்கி உள்ளது.

மழை
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 140 கிமீ தூரத்தில் இந்த தாழ்வு மண்டலம் உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு பிறகு தாழ்வு மண்டலம் சென்னை அருகே.. காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளது. இதன் மேகங்கள் சென்னை அருகே இருப்பதால் சென்னையில் மழை பெய்து வருகிறது.

நீர் வந்தது
இரவு முழுக்க பெய்த மழை, இப்போது பெய்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏரிகளில் நீர் திறப்பு காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் புகுந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 20.48 அடி வரை நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 5240 கன அடியாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ளம்
புழல் ஏரிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று 8 அடி ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்த நிலையில் இன்று அதிகாலை 10 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள பல பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வட சென்னை, மத்திய சென்னையில்தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

பாதிப்பு
அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர் , தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடியாமல் தண்ணீர் தேங்கி உள்ளது. இங்கு காலை 11 மணி நிலவரப்படி பல இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவர் கட்
வெள்ளம் வடியாத காரணத்தால் மக்கள் வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். வெள்ள நீர் வடியாததால் மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. தியாகராயநகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சென்னையில் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வெள்ளம்
பெரும்பாலான பகுதிகளுக்கு அரசின் நிவாரண பொருட்கள் செல்லவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் பெரும்பாலான இடங்களில் நேரில் வந்து பார்வையிடவில்லை. இதனால் வெள்ளமும், வடியவில்லை மக்களும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட மக்கள் வெளியே செல்ல முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.

தாழ்வான பகுதிகள்
முக்கியமாக தாழ்வான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் பல இடங்களில் நீர் புகுந்துள்ளது. இவர்கள்தான் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications