தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை - வானிலை மையத்தின் ஜில் அறிவிப்பு
தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த இரண்டு மாதங்களாக விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் 3 செமீ பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, சோலையாறு,பொள்ளாச்சியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே இன்று முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் நா. புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 1ஆம் தேதி புதன் கிழமை, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 2 ஆம் தேதி கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செப்டம்பர் 2 ஆம் தேதி கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செப்டம்பர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஓரிரு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications