சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. குளிர்ந்த காற்று.. இருளில் மூழ்கிய தலைநகரம்
சென்னை: சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருவதால தலைநகரில் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வடசென்னையில் 3 அடி அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது இன்றைய தினம் காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே சென்னை அருகே கரையை கடப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4ஆவது நாள்
இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4ஆவது நாளாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

வியாசர்பாடி
அவற்றில் வியாசர்பாடி சுரங்கப் பாதை, கணேஷபுரம், அஜாக்ஸ், கெங்கு ரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கபாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, வில்லிவாக்கம் சுரங்கபாதை, காக்கன் சுரங்கபாதை உள்ளிட்டவை போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளன.

முக்கிய சாலைகள்
அது போல் மழையால் முக்கிய சாலைகள் மூடப்பட்டன. அவற்றில் கே கே நகர்- ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர்- டாக்டர் சிவசாமி சாலை, ஈவிஆர் சாலை- காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம்- ஜவஹர் நகர், பெரவள்ளூர்- 70 அடி சாலை, புளியந்தோப்பு- டாக்டர் அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் சாலை, பட்டாளம் மணி கூண்டு, வியாசர்பாடி- முல்லை நகர் பாலம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

மாநகராட்சி
இதனால் மாற்று ஏற்பாடுகளையும் மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர். எச் சாலை, மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவிலிருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பியுள்ளதால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மழை
இந்த நிலையில் விடிய விடிய சென்னையில் கனமழை கொட்டிய நிலையில் கடும் குளிர் வீசி வருகிறது. மேலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. தியாகராயநகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications