மிரட்டும் இடியுடன்.. சென்னையில் மீண்டும் கனமழை.. ஆஃப் மோடுக்கு சென்ற ஃபேன்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை பெய்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த அக்டோபர் 31, நவம்பர் 1, 2, ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது.

இதனால் சில இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மழை நீரை அகற்றிவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, எழும்பூர், பெரம்பூர், சூளைமேடு, புரசை, கோயம்பேடு, கிண்டி, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அது போல் நள்ளிரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று விடியற்காலையிலும் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று காலை முதலே வெயில் வருவதும் மேகங்கள் வருவதுமாக இருந்தது. அப்போது மதியம் 1.30 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், பெரம்பூர், வியாசர்பாடி, முகப்பேர், அண்ணா நகர், பேசின் பாலம், ஓட்டேரி, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது.
அது போல் தாம்பரம், பெருங்களத்தூர், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பலத்த இடி சப்தத்துடன் மழை பெய்கிறது, இதனால் சென்னை முழுதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையில் ஆங்காங்கே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications